மின்சார ஆட்டோவில் சவாரி செய்த கர்நாடகா முதலமைச்சர்... எதுக்காக இந்த சவாரி தெரியுமா?
கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா மின்சார ஆட்டோவில் பயணிக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன. இவை சுற்றுச் சூழலுக்கு நண்பனாக செயல்படும் என்கிற காரணத்தினால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல இதற்கு மானியம் போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கின்றன.

பெட்ரோல்-டீசல் வாகனங்களைக் காட்டிலும் மின்சார வாகனங்களைப் பராமரிப்பது மிகவும் சுலபம். மேலும், மிக குறைந்த செலவீணத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற பல்வேறு காரணங்களினாலயே மக்கள் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர்.

இதற்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் அறிமுகமாகிய புதுமுக மின் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் மின்சார வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை உள்ளிட்டவையே சான்று.

இம்மாதிரியான சூழ்நிலையில் மின் வாகனங்களின் பயன்பாட்டையும், விற்பனையையும் ஊக்குவிக்கின்ற வகையிலான முயற்சியில் கர்நாடகா அரசும் களமிறங்கியுள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அது மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது.

இதனை வெளிப்படுத்துகின்ற ஓர் நிகழ்வே இன்று கர்நாடகாவில் அரங்கேறியது. ஆமாங்க, இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மின் வாகனங்களுக்கான ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. இதுவே மாநிலத்தின் முதல் ஸ்வாப்பபிள் பேட்டரி வழங்கும் நிலையம் ஆகும்.

எனவே இந்நிகழ்வில் அம்மாநில முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டார். அப்போதே மின்சார ஆட்டோ ஒன்றில் ஏறி எடியூரப்பா பயணித்தார். இந்த புகைப்படமே இணையத்தில் தற்போது வைரலாகத் தொடங்கியுள்ளது. கர்நாடகா அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பலர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த முயற்சி மக்கள் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும் என நம்பப்படுகின்றது. இதுபோன்று மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கின்ற வகையிலான முயற்சியை கர்நாடகா அரசு மேற்கொள்வது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டிற்கே முன்னோடியாக மாறுகின்ற வகையில் பலன்முக நடவடிக்கைகளை அது எடுத்திருக்கின்றது.

எனவேதான் தென் மாநிலங்களிலேயே அதிக எண்ணிக்கையில் மின் வாகனங்கள் கர்நாடகாவில் பயன்பாட்டில் இருக்கின்றது. குறிப்பாக பெங்களூரு நகரத்திலேயே அதிக மின்சார வாகனங்களை நம்மால் காண முடிகின்றது. மேலும், விற்பனைக்கு வரும் மின் வாகனங்கள் சென்னையில் விற்பனைக்கு வருகின்றதோ இல்லையோ பெங்களூருவில் விற்பனைக்கு வந்துவிடும்.

மின் வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதி அதிகம் என்பதனாலயே இந்த நிலைக் காணப்படுகின்றது. இந்தநிலை மேலும் வலுவானதாக மாற்றும் நோக்கிலேயே புதிய ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையங்கள், மின்சார வாகனங்களுக்கான பேட்டரியை முழுமையான சார்ஜுடன் தயார்நிலையில் வைத்து வழங்குவதே அதன் முக்கிய பணியாகும். இதனையே சன் மொபிலிட்டி நிறுவனம் பெங்களூருவில் இன்று பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தது.


Click it and Unblock the Notifications








