இந்த இ-சைக்கிள் ஒன்னே போதும் மதுரையை இரண்டு முறை சுற்றி வரலாம்... நம்ப முடியாத அசத்தலான ரேஞ்ஜ்!
அதிக அளவு ரேஞ்ஜை வழங்கும் இரு இ-பைக்குகளை சிசிலி ஒலிம்பியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

உலகம் முழுவதிலும் பசுமை வாகனங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அதன் புதிய தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தி வருகின்றன.
அதிலும், மின்வாகனங்களை களமிறக்குவதில் சர்வதேச அளவில் போட்டி நிலவிய வண்ணம் இருக்கின்றது.

குறிப்பாக, அந்த மின் வாகனங்களில் புதிய தொழில்நுட்பம் மற்றும் அதிக சிறப்பம்சங்களை அறிமுகம் செய்வதில் கடும் போட்டி நிலவுகின்றது.
இதனால் ஒவ்வொரு நாளும் அறிமுகமாகும் மின்சார தரத்திலான வாகனங்கள் புதிய தொழில்நுட்பம் கொண்டவையாக காட்சியளிக்கின்றன.

அந்தவகையில், வியக்க வைக்கும் ரேஞ்ஜ் கொண்ட இ-பைக்கை இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிசிலி ஒலிம்பியா என்னும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இது அந்நாட்டின் மிகவும் பழமை வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாகும். இதுதான் தற்போது மிகப்பெரிய பேட்டரி பேக்கைக் கொண்ட இ-பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இஎக்ஸ்900, இஎக்ஸ் 900 ஸ்போர்ட் ஆகிய மாடல்களைதான் அது வெளியீடு செய்துள்ளது. இவற்றில் பவர்நைன் 900Wh (PowerNine 900Wh) என்ற பேட்டரியை சிசிலி ஒலிம்பியா பயன்படுத்தியிருக்கின்றது. இது, மிகச்சிறிய மற்றும் லேசான பேட்டரிகள் ஆகும்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த இ-பைக்கில் பெடல் அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே, சார்ஜ் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டாம். இ-பைக்கை மிதிவண்டியாக மாற்றி பெடல் செய்தே இலக்கைச் சேர்ந்துவிட முடியும். எனவே, சார்ஜிங் நிலையங்களைத் தேடி அலைய வேண்டிய அவல நிலையும் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஹீரோ நிறுவனமும் லெக்ட்ரோ இஎச்எக்ஸ்20 என்ற பெயரில் இதே மாதிரியான இ-பைக்குகளை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த மின்சார வாகனத்தில் 400Wh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டிருக்கின்றது.
சரி வாருங்கள் சிசிலியாவின் இ-பைக் பற்றிய முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்.

பெரியளவில் பேட்டரி பேக் வழங்கப்பட்டிருப்பதால் இந்த இ-பைக் அதிக எடைக்கொண்டதாக இருக்கும் என நினைத்துவிட வேண்டாம். ஏனென்றால் இதன் ஒட்டுமொத்த எடையே வெறும் 70 கிலோ மட்டும்தான். ஆனால், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 290 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

இந்த ரேஞ்ஜை இந்தியாவில் விற்பனையாகும் ஒரு சில மின்சார கார்களே வழங்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. ஆகையால், இது பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. அதேசமயம், தற்போது விற்பனையில் இருக்கும் இருசக்கர மின்சார வாகனங்களைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிக ரேஞ்ஜைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. இந்த ரேஞ்ஜானது மதுரை மாநகரத்தையே இரு முறை வலம் வருவதற்கு போதுமான ரேஞ்ஜாகும்.

இந்த ரேஞ்ஜ் வழங்கும் விதமானது சாலைகளின் பாதையைப் பொருத்து ஏற்றம் மற்றும் இறக்கத்தைப் பெறும். அதாவது, நீண்ட தூர இறக்கமான சாலையாக இருந்தால் கூடுதலாக 50 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜை அது வழங்கும்.
இத்தகைய ரேஞ்ஜை இந்த பேட்டரிகள் வழங்குவதால் இது மிகப்பெரியதாக இருக்குமோ என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம்.

ஆனால், அது தவறு. இந்த பேட்டரி மிகவும் லேசானது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இதன் பேட்டரிகள் இ-பைக்கின் சட்டத்திற்குள் அடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை மிகவும் சிறிய உருவம் கொண்டதாகும். எனவேதான் ஐம்பது யூனிட்டுகள் ஒவ்வொரு இ-பைக்கிலும் பயன்படுத்தப்படுகின்றது. இது, 21700 எல்ஜி லித்தியம் அயன் பேட்டரிகள் ஆகும்.

இது சைக்கிளில் இணைக்கப்பட்டிருக்கும் மின் மோட்டாருக்கு தேவையான திறனை வழங்க உதவும். இந்த மின்மோட்டார் 100 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், இதன் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 6 மணி நேரம் தேவைப்படுகின்றது. அவ்வாறு, சார்ஜ் செய்யும்பட்சத்தில் தினசரி பயனாளராக இருப்பின் ஒரு வாரம் வரை அந்த சார்ஜ் நீடித்து உழைக்கும்.

இந்த இ-பைக்கின் இரு வீல்களிலும் பிரேக்கிங் வசதிக்காக டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், சொகுசான பயண அனுபவத்திற்காக சஸ்பென்ஷன் அமைப்பும், ஷிமனோ கியர் மற்றும் ரக்கர்ட் டயர்கள் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த இ-பைக்கின் விலைப் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. அதேபோன்று, இதன் இந்திய அறிமுகம் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஒரு வேலை இது பயன்பாட்டிற்கு வருமானால் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனங்களுக்குகூட செம்ம டஃபை வழங்கும்.


Click it and Unblock the Notifications








