இந்தியாவிலேயே முதல் ஆள்... ஒரே வாரத்தில் ஹீரோ செய்த சிறப்பான சம்பவம்... என்னனு தெரியுமா?
வாகன விற்பனை தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) மனித உயிர்களை கொத்து கொத்தாக பறித்து வருவதுடன் நிற்காமல் உலக பொருளாதாரத்தை ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஊரடங்கை அமல்படுத்தியதால், பெரும்பாலான தொழில்கள் நலிவடைந்துள்ளன.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், டீலர்ஷிப்கள் மூடப்பட்டதால், வாகன விற்பனையும் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இந்தியா உள்பட கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் தற்போது இதே நிலைதான் காணப்படுகிறது.

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கு வரும் மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாத கடைசியில் வாகன தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அத்துடன் வாகன ஷோரூம்களும் மூடப்பட்டன. இதனால் ஆட்டோமொபைல் துறை முற்றிலுமாக முடங்கி போயிருந்தது.

எனினும் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் முன்னணி நிறுவனங்கள் பலவும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வாகன உற்பத்தியை தொடங்கியுள்ளன. அத்துடன் ஷோரூம்கள் திறக்கப்பட்டு, வாகன விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்ட பின், இந்தியாவிலேயே தனது அன்றாட செயல்பாடுகளை தொடங்கிய முதல் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப்தான். உலகின் மிகப்பெரிய டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மே 4ம் தேதி இந்தியாவில் உள்ள 3 தொழிற்சாலைகளில் மீண்டும் பணிகளை தொடங்கியது.

ஹரியானாவில் உள்ள தருஹெரா, குர்கான் மற்றும் உத்தரகாண்ட்டில் உள்ள ஹரித்வார் ஆகிய ஆலைகளில் அன்றைய மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டது. முன்னதாக கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து தொழிற்சாலைகளிலும் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இப்படிப்பட்ட சூழலில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதால், ஹீரோ மோட்டோகார்ப் தனது அன்றாட செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான வாகனங்களை, தனது தொழிற்சாலைகளில் இருந்து அனுப்பி வைக்கும் பணிகளை, கடந்த மே 7ம் தேதி முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடங்கியுள்ளது.

அத்துடன் கடந்த வாரத்தில் இருந்து வாகன விற்பனையையும் ஹீரோ தொடங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் உள்பட 1,500க்கும் மேற்பட்ட கஸ்டமர் டச் பாயிண்ட்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த கஸ்டமர் டச் பாயிண்ட்கள் மீண்டும் திறக்கப்பட்டது முதல் சுமார் 10 ஆயிரம் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வாகனங்கள் அனைத்தும் கடந்த ஒரு வார காலத்தில் வாங்கப்பட்டவை/புக்கிங் செய்யப்பட்டவையா? அல்லது ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு, டீலர்ஷிப்கள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, கடந்த ஒரு வார காலத்தில் டெலிவரி செய்யப்பட்டவையா? என்பதை ஹீரோ மோட்டோகார்ப் தெளிவுபடுத்தவில்லை.

இந்தியாவில் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே ஆட்டோமொபைல் துறை கடுமையாக திணறி வருகிறது. பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பின் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா வைரஸ் வடிவத்தில் புதிய பிரச்னை வந்துள்ளது. இதன் காரணமாக வரும் மாதங்களில் வாகனங்களின் விற்பனை எப்படி இருக்கும்? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தொழில்களும் நலிவடைந்துள்ளன. அத்துடன் பலர் வேலையை இழந்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால், எதிர்காலத்தை மனதில் வைத்து, சிக்கன நடவடிக்கைகளில் மக்கள் இறங்கியுள்ளனர். எனவே வாகனங்களை வாங்குவதற்கு ஏற்கனவே செய்திருந்த முன்பதிவுகளை வாடிக்கையாளர்கள் பலர் ரத்து செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதே சமயம் மறுபக்கம் கோவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக, பஸ், ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விட்டு, சொந்தமாக கார்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வாகனங்கள் விற்பனை படிப்படியாக அதிகரிக்குமா? அல்லது வீழ்ச்சியடையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








