ரொம்ப தேங்க்ஸ்... நம்ம தமிழ்நாட்டிற்காக சூப்பரான காரியத்தை செய்த யமஹா ஊழியர்கள்... என்னனு தெரியுமா?
யமஹா நிறுவனத்தின் ஊழியர்கள் நல்ல காரியம் ஒன்றை செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) உலகையே தற்போது நிலைகுலைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால், மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளையெல்லாம் கொரோனா வைரஸ் மிக கடுமையாக தாக்கியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தற்போது வேகம் எடுத்துள்ளது. இதை தடுப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட உதவும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்கு தற்போது நிதியுதவியும் குவிந்து வருகிறது.

குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த வரிசையில், கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு, யமஹா நிறுவனத்தின் ஊழியர்கள் தற்போது 61.5 லட்ச ரூபாயை நன்கொடையாக வாரி வழங்கியுள்ளனர். இது யமஹா நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை விட்டு கொடுத்து, 61.5 லட்ச ரூபாய் நிதியை திரட்டியுள்ளனர். இந்த தகவலை யமஹா நிறுவனம் நேற்று (மே 9) வெளியிட்ட பத்திரிக்கை செய்தியின் மூலம் தெரிவித்துள்ளது. இந்த தொகையை மத்திய, மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கவுள்ளதாக, யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி மற்றும் உத்தர பிரதேச முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா 25 லட்ச ரூபாய் வழங்கப்படவுள்ளது. எஞ்சிய 11.5 லட்ச ரூபாய் பிஎம் கேர்ஸ் ஃபண்டிற்கு (PM Cares Fund) நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யமஹா ஊழியர்களின் இந்த செயல்பாடு பாராட்டுக்குரியது.

காஞ்சிபுரம் (தமிழ் நாடு), சூரஜ்பூர் (உத்தர பிரதேசம்) மற்றும் ஃபரிதாபாத் (ஹரியானா) ஆகிய 3 ஆலைகளில் பணியாற்றும் ஒயிட்-காலர் மற்றும் ப்ளூ-காலர் பணியாளர்கள் மற்றும் அங்கு பயிற்சி பெற்று வரும் சிலர் ஆகியோர் இந்த நன்கொடையில் பங்களிப்பு செய்துள்ளனர். அத்துடன் சென்னையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஏரியா அலுவலகங்களும் பங்களிப்பை செய்துள்ளன.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களின் இத்தகைய பங்களிப்பு பாராட்டத்தக்கது. குறிப்பாக வென்டிலேட்டர்களின் உற்பத்தியில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறப்பாக பங்களித்து வருகின்றன. கொரோனா வைரசுக்கு எதிரான போரில், வென்டிலேட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தற்போது அதிக அளவில் வென்டிலேட்டர்கள் தேவைப்படுவதால், அவற்றை உற்பத்தி செய்து வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டு கொண்டது. இதன் பேரில் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸுகி மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளில் களமிறங்கியுள்ளன.

அதே சமயம் எம்ஜி மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள் பயணம் செய்வதற்காக கார்களை வழங்கவும் முன்வந்துள்ளன. எம்ஜி மோட்டார் நிறுவனம் 100 ஹெக்டர் எஸ்யூவி கார்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியா தவிர, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், கொரோனா வைரசுக்கு எதிரான போரில், சிறப்பான பங்களிப்பை வழங்கி கொண்டுள்ளன. இதன்படி டெஸ்லா, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய களமிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








