பாவ்லோ கான்காவ்ல்ஸ் மரணம் எதிரொலி... டக்கார் ராலியிலிருந்து விலகியது ஹீரோ அணி!
டக்கார் ராலியில் நடந்த விபத்தில் கான்காவ்ல்வ்ஸ் மரணம் அடைந்ததன் எதிரொலியாக, போட்டியிலிருந்து விலகுவதாக ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான டக்கார் ராலி பந்தயம் சவூதி அரேபிய நாட்டில் நடந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில், 7வது ஸ்டேஜ் போட்டியின்போது ஹீரோ அணி வீரர் பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி நிர்வாகத்திற்கும், சக போட்டியாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த முன்னணி வீரராகவும், டக்கார் ராலியில் மிகவும் சிறப்பான தர வரிசையை பெற்று வந்த கான்கால்வ்ஸ் திடீர் மரணம் ஹீரோ அணிக்கு பெரும் அதிர்ச்சியையும், இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ஹீரோ அணி சார்பில் பங்கேற்றுள்ள பிற வீரர்களுக்கும் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தொடர்ந்து போட்டியில் பங்கு கொள்ள ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் நிர்வாகம் விரும்பவில்லை.

பாவ்லோ கான்காவ்ல்ஸ் குடும்பத்தினரின் துயரத்தில் சக வீரர்கள், அணி நிர்வாகத்தினர், மீட்பு குழு ஆகியோர் பங்கு கொள்ளும் விதத்தில், டக்கார் ராலியின் 7வது ஸ்டேஜ் போட்டியுடன் விலகுவதாக ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் ரேஸிங் அணி அறிவித்துள்ளது.

உலகின் மிகவும் சவாலான ராலி ரேஸ் பந்தயமாக டக்கார் ராலி கருதப்படுகிறது. இந்த போட்டியில் பங்குகொள்ளும் வீரர்களின் மன வலிமை, உடல் வலிமை, சமயோஜிதம், வாகனத்தின் கட்டுமானம் மற்றும் தொழில்நுட்ப திறன் என அனைத்தையும் பரிசோதிக்கும் விதத்தில், மிக சவாலானதாக இந்த டக்கார் ராலி போட்டி இருந்து வருகிறது.

இந்த போட்டியில் வாழ்வா, சாவா என்ற போராட்டத்துடன்தான் வீரர்கள் பங்கு கொள்கின்றனர். இந்த நிலையில், டக்கார் ராலியில் 13 முறை பங்கு கொண்டு முக்கிய இடத்தை பதிவு செய்து வந்த பாவ்லோ கான்கால்வ்ஸ் மரணம் ஒட்டுமொத்த மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையினருக்கு இழப்பாகவும், அதிர்ச்சியாகவும் மாறி இருக்கிறது.

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த 40 வயதான கான்கால்வ்ஸ் இந்த ஆண்டுக்கான டக்கார் ராலியில் முதல் ஆறு ஸ்டேஜ் போட்டிகளில் மிக சிறப்பான முன்னேறி வந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கி அவர் மரணத்தை தழுவ நேரிடிட்டுள்ளது.

பாவ்லோ கான்கால்வ்ஸ் மரணம் ஹீரோ அணி மற்றும் சக அணி வீரர்கள் மட்டுமின்றி, டக்கார் ராலியில் பங்கு கொண்ட அனைத்து வீரர்களுக்குமே அதிர்ச்சியை வழங்கி இருக்கிறது.
கடந்த 2015ம் ஆண்டு போலந்து நாட்டு வீரர் மிச்சல் ஹெர்னிக் அர்ஜென்டினாவில் நடந்த டக்கார் ராலியில் மரணமடைந்தார். இதையடுத்து, தற்போது கான்கால்வ்ஸ் மரணமடைந்திருப்பது மோட்டார் பந்தய ரசிகர்களையும், வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த ஆண்டு டக்கார் ராலி 12 ஸ்டேஜ் போட்டிகளாக நடத்தப்படுகிறது. நேற்று 8வது ஸ்டேஜ் போட்டி நிறைவுபெற்ற நிலையில், இன்று 9வது ஸ்டேஜ் போட்டி நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








