நிஞ்சா பைக்கை ரேஸுக்கு அழைத்த ஹோண்டா ஆக்டிவா... தலை, கால் புரியாமல் ஆடிய இளைஞர்கள்! இதுதான் காரணமா?
998சிசி திறன் கொண்ட பைக்கை 110சிசி திறனுடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ரேஸுக்கு அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இணையத்தில் வாகன ரேஸ் பற்றிய வீடியோக்கள் பல உலா வந்த வண்ணம் இருக்கின்றன. காருடன், கார் ரேஸ் செய்வது அல்லது காருடன் அதி திறன் வாய்ந்த பைக் ரேஸ் செய்வது மற்றும் இரு பைக்குகள் பந்தயம் செய்வது இதுமாதிரியான ஏற்றுக் கொள்ளக்கூடிய ரேஸ் பற்றிய வீடியோக்களே இணையத்தில் அதிகம் இருக்கின்றன.

ஆனால், இதில் முற்றிலும் மாறுபடுகின்ற வகையிலான ஓர் வீடியோவை டாக்டர் ஜலஜ் குமார், என்பவர் அவரது யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர், கவாஸாகி நிறுவனத்தின் விலையுயர்ந்த மற்றும் அதி திறன் வாய்ந்த பைக்குகளில் ஒன்றான நிஞ்ஜா இசட்எக்ஸ் 10 ஆர் பைக்கை ரேஸுக்கு அழைப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த இளைஞர்கள் பைக்கை ரேஸுக்கு அழைத்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் பைக்கில் சென்ற டாக்டர் ஜலஜ் குமாரை அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டுள்ளனர். ஆம், இந்த அத்துமீறல் சம்பவம் டாக்டர் ஜலக் குமாருக்குதான் அரங்கேறியிருக்கின்றது. இவர் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சம்பவமும் அங்குதான் நடைபெற்றிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பீதிக்கு மத்தியில் லேசான தளர்வுகளுடன் ஊரடங்கு நீடித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகள் இயங்கத் தொடங்கியுள்ளன. அதில், மது விற்பனை நிலையங்களும் அடங்கும். வெகு நீண்ட நாட்களாக மது வாடையே இன்றி பல நாட்களாக தவித்து வந்த மது பிரியர்களுக்கு இந்த நிகழ்வு பேரின்பமாக அமைந்தது.

கடைகள் திறக்கப்பட்ட கையோடு, முந்தைய நாட்களைப் போலவே போதை ஆசாமிகளால் நிகழும் சேட்டைகளும் தொடங்கியிருக்கின்றது. இதை ஏன் நாம் இங்கு பார்க்கின்றோம் என்றால், கவாஸாகி நிஞ்ஜா பைக்கை ரேஸுக்கு அழைத்து அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

கடந்த காலங்களில், அதாவது, மது கடைகள் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் அறவே இல்லாமலே இருந்தன. ஆனால், தற்போது அது மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளன.

இதை உறுதிச் செய்யும் வகையிலேயே தலைநகர் டெல்லியில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த போதை ஆசாமிகள் மருத்துவரை வம்புக்கு இழுத்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவம் சுமார் 9.45 மணியளவில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

இளைஞர்கள் வைத்திருந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரைக் காட்டிலும் பல மடங்கு அதி வேக திறன் கொண்டதுதான் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்10ஆர் பைக். ஆனால், போதை தலைக்கு மேலே இருந்த காரணத்தால் அந்த பைக்கை அவர்கள் ரேஸுக்கு அழைத்துள்ளனர். ரேஸுக்கு அழத்தது மட்டுமின்றி அந்த பைக்கை முன்னேறிச் செல்ல விடாமல் சில இடங்களில் இடையூறுகளையும் அவர்கள் செய்திருந்தனர்.

அதாவது, கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்10ஆர் பைக் முன்பு வளைந்து நெளிந்து அவர்கள் சென்றிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பைக்கை மடக்கி பிடித்த அந்த இளைஞர்கள் நிஞ்சா பைக்கிற்கான சாவியை பிடுங்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் டாக்டர் ஜலஜ் குமார் அணிந்திருந்த ஹெல்மெட் கேமிராவில் பதிவாயுள்ளன.

அப்போது, அந்த சாலை வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஒருவர் வந்தார். அவரிடத்தில் நடந்தவற்றை கூறியதுடன், அவசர உதவி எண் 100-க்கும் அவர் அழைப்பு விடுத்தார். இவையனைத்தும் அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில் காட்சியாக்கப்பட்டிருந்தன.
அதேசமயம், அந்த வீடியோ பாதியில் இருந்தே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, முன்பாக இருவருக்கும் இடையே என்னவாயிற்று என்பது தெரியவில்லை. மேலும், எப்படி மோதல் தோன்றியது என்பது தெளிவாக தெரியவரவில்லை. இருப்பினும், இந்த பிரச்னை தற்போது காவல்நிலையம் வரைச் சென்றிருக்கின்றது.

இந்திய சாலைகளில் ரேஸ் என்பது அண்மைக் காலங்களாக பொதுவான விஷயமாக மாறி வருகின்றது. யாரென்றே அறியாத இரு சூப்பர் பைக் உரிமையாளர்கள், நேருக்கு நேராக சந்திக்கும்போது அந்த ரேஸ் தொடங்குகின்றது. இது பல நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தையை ஏற்படுத்தி விடுகின்றன. இருப்பினும், ஒரு சிலர் விபரீதம் அறியாமல் பந்தயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்று, ரேஸ் செய்வது ஆபத்தை மட்டுமின்றி சட்டத்தின் பிடியில் சிக்கவும் வழி வகுகின்றது. எனவே, திடீர் பந்தயங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அதேசமயம், இந்த சம்பவத்தில் பலர் அறிய வேண்டிய ஒன்று என்னவென்றால் 998சிசி திறன் கொண்ட பைக்காகும். இந்த பைக்குடன் சில லட்சங்களில் விற்பனையாகும் பைக்கினாலேயே டஃப் கொடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








