எவோலெட் ரேப்டர் மேக்ஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... பார்த்ததுமே புக்கிங் பண்ண தோணுதுல்ல!
எவோலெட் நிறுவனத்தின் ரேப்டர் மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மேக்ஸி ஸ்கூட்டர் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குர்கானை சேர்ந்த எவோலெட் நிறுவனம் மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. ஏற்கனவே, டெர்பி மற்றும் போல என்ற இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் வகை வகையான மாடல்களை காட்சிப்படுத்தி உள்ளது. இதில், அந்நிறுவனம் காட்சிப்படுத்தி உள்ள ரேப்டர் என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர் பார்வையாளர்களையும், பத்திரிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

குறிப்பாக, இந்த மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரம்மாண்ட தோற்றம் எல்லோரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. முன்புறத்தில் மிக பிரம்மாண்டமான அப்ரான் பகுதி, பெரிய விண்ட் ஷீல்டு மற்றும் பெரிய டயர்கள் என மிக மிக உயர் வகை மாடலாக தன்னை பரைசாற்றிக் கொள்கிறது இந்த எவோலெட் ரேப்டர் ஸ்கூட்டர்.

இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களில் மிகவும் நேர்த்தியான அப்ரான் என்று சொல்லப்படும் முகப்புப் பகுதியை கொண்ட மாடலாகவும் இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

இந்த ஸ்கூட்டரின் இருக்கைகள் மிக விசாலமாக இருக்கிறது. இதனால், இரண்டு பேர் மிக சவுகரியமாக அமர்ந்து செல்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

புதிய எவோலெட் ரேப்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில 72Ah பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 3 முதல் 4 மணிநேரம் பிடிக்கும். இந்த ஸ்கூட்டரில் 3kW மின் மோட்டார் உள்ளது. மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது முழுமையான விபரங்கள் வரும்போது இந்த திறன் அளவு என்பது பேட்டரியை பொறுத்து மாறுபடும் என்று தெரிகிறது.

புதிய எவோலெட் ரேப்டர் மேக்ஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் முழு அளவிலான தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவோலெட் நிறுவனத்திற்கு ஹரியானா மாநிலத்திலும், ஹைதராபாத் மற்றும் சென்னையிலும் மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் உள்ளன. ஹரியானா ஆலையில் மின்சார இருசக்கர வாகனங்களும், ஹைதராபாத் மற்றும் சென்னையில் பஸ்களை உற்பத்தி செய்யும் கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








