இருக்கும் இடத்தை தேடி வந்து உதவும் ட்ரோன்... நிவாரண பொருட்களை விநியோகிக்க புதுமையான முயற்சி!
நிவாரணப் பொருட்களை விரைந்து விநியோகிக்கும் வகையில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) ஆகியவை இணைந்து கருட் (GARUD) சேவையைத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகின்றது. ஒரே ஒரு வைரஸ்தானே இது நம்மை என்ன செய்துவிடும் என எண்ணிய உலக வல்லரசு நாடுகள்கூட வைரசின் கோர பிடியில் சிக்கி மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றன. தற்போதுவரை இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்காமல் இருப்பது கூடுதல் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.

வைரஸ் பரவலின் காரணமாகவே, உலக நாடுகள் பல தங்களின் மக்களை பாதுகாப்பதற்காக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருக்கின்றன. இதே நிலையில்தான் தற்போது இந்தியாவும் இருக்கின்றது.

இந்த நிலை கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் நீடித்து வருகின்றது. குறிப்பிட்டு கூறவேண்டுமானால் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் தொடங்கிய ஊரடங்கு 40 நாட்களையும் கடந்து அமலில் இருந்து வருகின்றது.

அதாவது, தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் செயல்பாட்டில் உள்ளது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை வார்த்தைகளால் கூறமுடியாத அளவிற்கு மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக ஏழை, எளிய மற்றும் தினக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதரம் அதள பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது.

அரசின் ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவை தங்களுக்கு போதுமானதாக இல்லை என பொதுமக்கள் சிலர் புகார் கூறுவதை நம்மால் காண முடிகின்றது. மேலும் பலர் தங்களுக்கு இந்த உதவி கிடைக்கவே இல்லை என தெரிவித்து வருகின்றனர்.

இம்மாதிரியான சூழ்நிலையில் சில தனியார் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வறுமையில் வாடி வரும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றன. அவை, அத்தியாவசிய பொருட்களை வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், பாதுகாப்பு உபகரணங்களான மாஸ்க், சானிட்டைசர் உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகின்றன. இதில், வாகனம் சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் பங்கு அளப்பறிய முடியாதது.

இந்நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்வது மற்றும் அரசிடம் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனை தீர்க்கும் விதமாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) இணைந்து கருட் (GARUD) எனும் சேவையைத் தொடங்கியிருக்கின்றது.

அதாவது, உளவு மற்றும் காட்சிப் பதிவுகளுக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்களைப் பயன்படுத்தி நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்கான செயலுக்கு வழங்கப்பட்டிருக்கும் அங்கீகாரத்தையே அரசு கருட் (ஜிஏஆர்யுடி) என்று பெயரிட்டுள்ளது.

இதற்காக தனி இணைய தள பக்கத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனைத் தவிர்த்து தவறானவற்றிற்காக இந்த சேவைப் பயன்படுத்தப்பட்டால், பயன்படுத்தியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் தளத்தின் மூலம் முன் பதிவு செய்தால் மட்டுமே ட்ரோன்களைப் பயன்படுத்தி நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க முடியும்.
இந்த பணியை தொலைதூர பைலட் விமான அமைப்பு (ஆர்.பி.ஏ.எஸ்) ட்ரோன்கள் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கும்.

இந்த சேவையானது அரசு துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வழங்கப்பட இருக்கின்றது. ஆகையால், தனியார் அமைப்புகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா., என்பதுகுறித்த தகவல் கேள்விக்குறியாக உள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில் எம்ஓசிஏ அதன் டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை செய்துள்ளது. அதில், "எம்ஓசிஏ மற்றும் டிஜிசிஏ இணைந்து கருட் என்னும் ட்ரோன் சேவையை தொடங்கியுள்ளது. https://garud.civilaviation.gov.in என்னும் இணையதள பக்கத்தைத் தொடர்புக்கொண்டு அரசுத்துறைகளுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை மிக வேகமாக வழங்க முடியும்" என கூறியுள்ளது.

இந்த சிறப்பு சேவைக்கான ஒப்புதலை எம்ஓசிஏ அமைப்பு கடந்த இரு வாரங்களுக்கு முன்பே பெற்றதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்தே தற்போது அதற்கான தளம் மற்றும் புதிய திட்டங்களுடன் அதனை எம்ஓசிஏ அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கால் போக்குவரத்து பெருமளவில் இதனால் நிவாரணப் பொருட்கள் மட்டுமல்ல அத்தியாவசிய பொருட்களின் பறிமாற்றமும் லேசாக பாதித்துள்ளது.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டே பறக்கும் ட்ரோன்களைக் கொண்டு ஒரு பகுதியில் மற்ற பகுதிகளுக்கு எடுத்தும் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாதிரியான நடவடிக்கையை உலக நாடுகள் பல ஏற்கனவே பயன்பாட்டிற்கு கொண்டுவந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








