ஹார்லி டேவிட்சன் & ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி சேர்ந்தன!! இனி இவற்றின் பைக்குகள் எவ்வாறு வரப்போகிறதோ..
இந்திய சந்தைக்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கூட்டணி குறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த புதிய கூட்டணி ஹார்லி டேவிட்சனின் ‘தி வயர்' என்ற புதிய வியாபார யுக்தியின் ஒரு வெளிப்பாடாகும். கூட்டணி ஒப்பந்தத்தின்படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை தனது ஷோரூம்களில் விற்பனை செய்யவுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்களுக்கு தேவையான சேவைகளையும் வழங்கவுள்ளது. ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் உடன் மோட்டார்சைக்கிளுக்கு தேவையான பாகங்கள் & ஆக்ஸஸரீகள் இனி ஹார்லி டேவிட்சன் பிராண்டின் பிரத்தியேக டீலர்ஷிப்களிலும், ஹீரோவின் இந்திய ஷோரூம்களிலும் கிடைக்கும்.

இந்த கூட்டணியின் மூலம் ஹீரோவின் ப்ரீமியம் மோட்டார்சைக்கிள் பிராண்டாக ஹார்லி டேவிட்சன் மாறுகிறது. இரு நிறுவனங்களுக்கும் இலாபம் ஈட்டி தரும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப்பின் மிக பெரிய நெட்வொர்க்கின் மூலமாக ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுடனான நெருக்கத்தை இன்னும் அதிகரிக்க முடியும் என ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

முன்பே கூறியதுதான், இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்டிற்கும், உலகின் பெரிய இரு-சக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையேயான இந்த புதிய வணிக ஒப்பந்தம் ஹார்லி டேவிட்சனின் புதிய வணிக யுக்தியின் ஒரு பகுதியாகும். ஹார்லி டேவிட்சன் கொரோனாவினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால் இந்தியாவில் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

அதன் வெளிப்பாடாகவும் இந்த கூட்டணி இருக்கலாம். ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் தொழிற்சாலையை மூடிவிட்டதையும், குர்கானில் உள்ள அதன் விற்பனை தலைமை மையத்தில் செயல்பாடுகளை குறைத்து கொண்டதையும் ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

இதன் காரணமாக பல பணியாளர்களை வேலைவிட்டு நீக்கும் சூழ்நிலை ஹார்லி டேவிட்சனுக்கு உருவாகியுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹார்லி டேவிட்சனின் மலிவான பைக் ஸ்ட்ரீட் 750. இதன் எக்ஸ்ஷோரூம் விலை கிட்டத்தட்ட ரூ.5 லட்சமாகும்.

இரண்டு பிராண்டுகளுக்கிடையிலான இந்த கூட்டணி கடந்த சில மாதங்களாகவே ஊகிக்கப்பட்டு வந்ததுதான். இதன்பின் இந்திய சந்தையில் இரண்டு பிராண்டுகள் எவ்வாறு செயல்படும் என்பதையும், அவற்றின் கூட்டணியின் விளைவாக வெளிவரக்கூடிய புதிய வாகனங்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








