இந்தியர்களுக்காக புது வழியை தேர்வு செய்யும் ஹார்லி டேவிட்சன்... விரைவில் நல்ல செய்தி காத்திருக்கும்!
பிரபல இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவமான ஹார்லி டேவிட்சன், இந்தியாவை வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியநிலையில் அந்த நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருசக்கர வாகன பிரியர்களுக்கு பேரிடியை கொடுக்கின்ற வகையில் ஓர் தகவலை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அது இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருந்தது. விற்பனை இலக்கை எட்டாதது, அதிக வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய இருசக்கர வாகன சந்தையை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதைத்தொடர்ந்து, இந்தியாவில் இயக்கி வந்த அனைத்து தயாரிப்பு ஆலைகள் மற்றும் உற்பத்தி பணியையும் ஹார்லி டேவிட்சன் முடக்கியது. இதனால், ஹார்லி டேவிட்சனின் உற்பத்தி ஆலையில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் வேலையை இழந்து, தவிக்க ஆரம்பித்துள்ளனர். ஃபடா வெளியிட்ட தகவலின்படி, இந்த நிறுவனத்தின்கீழ் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வந்ததது தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் தற்போது பணியற்றவர்களாக மாறியிருக்கின்றனர். ஏற்கனவே வேலையில்லாமல் தவித்து வரும் பல கோடி இந்தியர்களின் வரிசையில் இவர்களும் தற்போது இணைந்திருக்கின்றனர். இதனால், நாட்டின் வேலையில்லாதோரின் வீக்கம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, கொரோனா வைரசால் பலர் வேலையை இழந்திருக்கின்றநிலையில் கூடுதல் சுமையாக இந்த நிலை உருவாகியிருக்கின்றது.

இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தற்போது இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் உதவியை நாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, நாட்டை விட்டு வெளியேறியநிலையில் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து தனது இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு களமிறக்க ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு பெரிய விற்பனை கிடைக்கவில்லை என்றாலும், இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கென தனித்துவமான ரசிகர்கள் பட்டாளம் இந்தியாவில் நீடித்து வருகின்றது. அதுமட்டுமின்றி கணிசமசான விற்பனை இலக்கையும் அந்நிறுவனம் ஒவ்வொரு வருடமும் பெற்று வருகின்றது. இதனைக் கைவிட்டுவிட கூடாது என்ற நோக்கிலேயே இந்தியாவில் இறக்குமதி வாயிலாக ஹீரோவுடன் இணைந்து வாகனங்களை விற்க அது திட்டமிட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஹார்லி வெளியிடவில்லை. மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இதுகுறித்த தகவலை வெளியிடாமல் இருக்கின்றது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல்களை வெகு விரைவில் இரு நிறுவனங்களும் வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தகவல் உறுதிப்படுத்தப்படுமேயானால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில பிரபலமான தயாரிப்புகளை இந்தியாவில் வைத்து தயாரித்து விற்பனைச் செய்யும். இதற்காக, ஹார்லி ஏற்கனவே பயன்படுத்தி வந்த பவல் உற்பத்தி ஆலையையே அது மீண்டும் பயன்படுத்துமா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் ஏற்கனவே மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு ஆலை அதன் வசம் இருக்கின்றது.

இங்கு ஹார்லியின் ஸ்ட்ரீட் 750 முதல் ஸ்ட்ரீட் 350 வரையிலான புதுமுக இருசக்கர வாகனங்களைக்கூட அதனால் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே விரைவில் ஹார்லி நிறுவனத்தின் தயாரிப்புகள் மீண்டும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹார்லி நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, "இது நிரந்தர முடக்கம் கிடையாது. நடப்பாண்டின் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் மீண்டும் எங்களுடைய தயாரிப்புகள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பதை உறுதிச் செய்வோம்" என கூறியிருந்தது. இந்த நிலையிலேயே இரு நிறுவனங்களின் இணைவு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோ-ஹார்லி இரு நிறுவனங்களின் இணைவு பற்றிய தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளி வராத நிலையிலேயே, இந்தியாவில் இயங்கி வந்த ஹார்லி டேவிட்சனின் விற்பனை நிலையங்களை இரு நிறுவனங்களும் இணைந்து மாற்றியமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாற்றியமைக்கும் பணிகள் 10 அல்லது 15 நாட்களுக்கு நிறைவடைந்துவிடும் என கூறப்படுகின்றது.

ஆகையால், மிக விரைவில் ஹார்லி டேவிட்சனின் இருசக்கர வாகனங்களை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவது இது முதல் முறையல்ல, இதற்கு முன்னதாகவும் இந்நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது. பின்னர், ஒரு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் புதுமுக தயாரிப்புகளுடன் களமிறங்கியது.

அப்போது, சிகேஎடி வாயிலாக தனது அனைத்து தயாரிப்புகளையும் அது விற்பனைக்குக் களமிறக்கியது. இந்த காரணத்தினால்தான் இதன் இருசக்கர வாகனங்கள் சற்று அதிக விலையைக் கொண்டவையாக இருக்கின்றன. மேலும், இதனாலேயே சரியான விற்பனை எண்ணிக்கையும் அதனால் பெற முடியவில்லை. இந்த நிலையிலேயே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டு, தற்போது ஹீரோவுடன் இணைந்து வர்த்தகத்தைத் தொடங்குவதற்கான முயற்சியில் அது ஈடுபட்டு வருகின்றது. இது எந்தமாதிரியான பலனை ஹார்லிக்கு வழங்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








