பைக் பிரியர்களுக்கு பேரதிர்ச்சியாக... இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது ஹார்லி டேவிட்சன்...
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை மற்றும் தயாரிப்பு பணிகளை நிறுத்தி கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. பைக் பிரியர்களின் தலையில் இடியாக விழுந்துள்ள இந்த அறிவிப்பை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் பிரபலமான அமெரிக்க மோட்டார் சைக்கிள் பிராண்டாக ஹார்லி டேவிட்சன் விளங்குகிறது. இந்தியாவில் இந்நிறுவனத்திற்கு ஹரியானா மாநிலம் பவால் பகுதியில் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்துதான் இந்நிறுவனம் தயாரிப்புகளை நாடு முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது, இந்தியாவில் தனது வணிக மாதிரியை மாற்றி வருவதாகவும், 'தி ரிவைர்' என்ற தனது வியாபார யுக்தியின் ஒரு பகுதியாக பெரிய சந்தை (இந்தியா) மறுசீரமைப்பு பணியை மேற்கொண்டு வருவதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி இந்நிறுவனத்தின் பவால் தொழிற்சாலை விரைவில் இழுத்து மூடப்படவுள்ளது. அதேநேரம் இந்தியாவில் நிறுவனத்தின் டீலர்கள் ஒப்பந்த கால அடிப்படையில் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சேவையினை வழங்குவார்கள் எனவும் இந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்கால ஆதரவிற்காக ஹார்லி டேவிட்சன் பிராண்ட் நாட்டில் உள்ள தனது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள ஏற்கனவே தொடங்கிவிட்டது. இருப்பினும், உதிரிபாகங்கள், மாற்று பாகங்கள் மற்றும் எதிர்கால வாகன சேவைகளில் இந்த பிராண்ட் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு உதவி புரியும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்திய சந்தையில் தயாரிப்புகளின் விற்பனையில் மிக பெரிய அளவிலான பின்னடைவை கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் உண்மையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை இந்தியாவில் பெரிய அளவில் புரட்டி போட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த வருடத்தில் நிறைய பணியாளர் நீக்க நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இந்த நடவடிக்கைகளும் ஹார்லி டேவிட்சனின் ரீவைர் வியாபார யுக்தியில் ஒரு பகுதியாக அடங்குகின்றன.

இந்த ரிவைர் வியாபார யுக்தி 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. இது 2021 - 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வியாபார திட்டத்திற்கு வழிவகுக்கும். ஹார்லி டேவிட்சனின் இந்த வருங்கால திட்டம் ‘தி ஹார்ட்வைர்' என அழைக்கப்படுகிறது.
இந்த திட்டம் பிராண்ட் மற்றும் தயாரிப்புகளுக்கான விரும்பத்தக்க சந்தையை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு செயல்முறை இந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்துவதாக கூறியிருந்த புதிய 338சிசி எண்ட்ரீ-லெவல் பைக்கின் இந்திய வருகையையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஏனெனில் இந்தியாவில் அனைத்து உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்ட நிலையில், ஹார்லி-டேவிட்சனிடமிருந்து புதிய அறிமுகம் குறித்த எந்த செய்தியும் இல்லை. புதிய 338சிசி ஹார்லி டேவிட்சன் பைக் இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களுக்கு நேரடி போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 4-5 ஆண்டுகளில் ஜென்ரல் மோட்டார்ஸ், யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ், ஃபியாட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்றுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஹார்லி டேவிட்சன் பிராண்ட்டும் இணைந்துள்ளது. தற்போதைய வாடிக்கையாளர்களை எதிர்காலத்தில் இந்நிறுவனம் எவ்வாறு கையாளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








