கேட்கும்போதே பெருமையா இருக்கு... ஹீரோ டூவீலர் நிறுவனம் செய்த அடுத்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா?
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அடுத்ததாக ஒரு நல்ல காரியத்தை தற்போது செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப், உலகிலேயே மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதன் தலைமையகம், புது டெல்லியில் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வரும் அதே நேரத்தில், சமூகத்திற்கும் சிறப்பான பங்களிப்பை ஹீரோ மோட்டோகார்ப் செய்து வருகிறது.

இந்த வரிசையில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 4 டூவீலர் ஆம்புலன்ஸ்களை (First Responder Vehicles) ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது நன்கொடையாக வழங்கியுள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில், ஒரு சில மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டு, இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகளை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கு, இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும். அதற்கு ஏற்ப, இந்த டூவீலர் ஆம்புலன்ஸில் முழு நீள ஸ்ட்ரெச்சர் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர முதலுதவி பெட்டி, ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்ற அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களும் இந்த டூவீலர் ஆம்புலன்ஸில் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் தீ அணைப்பானையும், இந்த டூவீலர் ஆம்புலன்ஸ் பெற்றுள்ளது. இதுதவிர எல்இடி ஃப்ளாஷர் லைட்கள், சைரன் ஆகியவையும் இந்த டூவீலர் ஆம்புலன்ஸில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அவசரகால வயர்லெஸ் பொது அறிவிப்பு அமைப்பையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த டூவீலர் ஆம்புலன்ஸில் வழங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதிகம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆம்புலன்ஸ்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களின் வருகைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழல் தற்போது பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது.

அப்படிப்பட்ட சூழலில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கியுள்ள இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் எக்ஸ்ட்ரீம்200ஆர் பைக்கை அடிப்படையாக கொண்ட டூவீலர் ஆம்புலன்ஸ்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சுகாதார துறைக்கு நன்கொடையாக வழங்குவது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு இதுபோன்ற 25 டூவீலர் ஆம்புலன்ஸ்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது வரை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதற்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

கார்ப்பரேட் சமூக பொறுப்பு (Corporate Social Responsibility - CSR) நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த நல்ல காரியங்களை செய்து வருகிறது. சுகாதார துறைக்கு டூவீலர் ஆம்புலன்ஸ்களை வழங்குவதுடன் மட்டுமல்லாது, காவல் துறையினருக்கு, சிறப்பு ஆக்ஸஸெரிகளுடன் இரு சக்கர வாகனங்களையும் ஹீரோ வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








