சூப்பர்... மருத்துவமனைக்கு டூவீலர் ஆம்புலன்ஸ்களை வழங்கிய ஹீரோ... இதோட ஸ்பெஷாலிட்டி என்னனு தெரியுமா?
ஹீரோ நிறுவனம் மருத்துவமனை ஒன்றுக்கு டூவீலர் ஆம்புலன்ஸ்களை தானமாக வழங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள், கார்ப்பரேட் சமூக பொறுப்பு (CSR - Corporate Social Responsibility) முயற்சிகளின் ஒரு பகுதியாக நாட்டிற்கு ஏராளமான நல்ல காரியங்களை தொடர்ச்சியாக செய்து வருகின்றன. இதில், உலகின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனமாக திகழும் ஹீரோ மோட்டோகார்ப் முக்கியமானது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது கார்ப்பரேட் சமூக பொறுப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக இரண்டு டூவீலர் ஆம்புலன்ஸ்களை (FRV - First Responder Vehicles), ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தற்போது வழங்கியுள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் தவிக்கும் நோயாளிகளுக்கு இந்த வாகனங்கள் வரப்பிரசாதமாக இருக்கும்.

அங்குள்ள நோயாளிகளை அழைத்து வந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ப்பதற்கு இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது, இப்படிப்பட்ட டூவீலர் ஆம்புலன்ஸ்களை மருத்துவமனைகளுக்கு வழங்குவது இது முதல் முறை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் இருக்கும் நீம்ரானா மற்றும் முன்டேவர் சமுதாய சுகாதார மையங்களுக்கு, கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதேபோன்ற இரண்டு டூவீலர் ஆம்புலன்ஸ்களை வழங்கியிருந்தது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கைகள் பாராட்டுதலுக்கு உரியவை.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் (Hero Xtreme 200R) பைக்கில் மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டு, இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளின் பக்கவாட்டில் நோயாளிகள் படுத்துக்கொள்ள ஏதுவாக ஸ்ட்ரெச்சர் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர முதலுதவி பெட்டியும் இந்த பைக்குகளில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆக்ஸிஜன் சிலிண்டர், தீயணைப்பான், அவசர சமயங்களில் பொதுமக்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதற்கான அமைப்பு, சைரன் ஆகியவையும் இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்களில் இடம்பெற்றுள்ளன. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில், 199.6 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 18.1 எச்பி பவர் மற்றும் 17.1 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

எளிதில் வளையக்கூடியதாகவும், அடக்கமான அளவில் இருப்பதாலும், இந்த டூவீலர் ஆம்புலன்ஸ்கள் மிகவும் சௌகரியமானதாக இருக்கும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதேபோன்ற டூவீலர் ஆம்புலன்ஸ்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள மருத்துவனைகளுக்கு வழங்கப்படும்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, 14 லட்சம் உணவு, 37 ஆயிரம் லிட்டர் சானிடைசர், 30 லட்சம் முக கவசங்கள் மற்றும் 15 ஆயிரம் முழு கவச உடைகள் (Personal Protective Equipment Kit - PPE kit) ஆகியவற்றை, அரசு மருத்துவமனைகள் மற்றும் காவல் துறையில் உள்ள முன்கள வீரர்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








