போன வாரம்தான் அறிமுகமாச்சு! அதுக்குள்ள மிக பெரிய ஆர்டர்... குஷியில் ஹீரோ எலெக்ட்ரிக்!
கடந்த வாரம் அறிமுகமான ஹீரோ எலெக்ட்ரிக் நைக்ஸ் எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டருக்கு பல்க் ஆர்டர் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ எலெக்ட்ரிக் விளங்குகின்றது. இந்நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு (அக்டோபர் 23) வர்த்தக பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் வகையில் நைக்ஸ் எச்எக்ஸ் எனும் மின்சார ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

குறைந்த விலை, பன்முக பயன்பாடு என பல்வேறு சிறப்பு வசதிகளைக் இந்த மின்சார ஸ்கூட்டர் கொண்டிருப்பதால், இதன் மீது வர்த்தக நிறுவனங்கள் சில அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் ஹரியானா மாநிலம், குருகிராம் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் சைப் எலெக்ட்ரிக் (Zypp Electric) நிறுவனம், ஹீரோ நைக்ஸ் எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டருக்கு பல்க் புக்கிங்கைக் கொடுத்துள்ளது.

ஆம், சைப் எலெக்ட்ரிக் நிறுவனம், நைக்ஸ் எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் ஆயிரம் யூனிட்டுகளுக்கான ஆர்டரை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக இரு நிறுவனங்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூட்டணியைத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. மொபிசி (Mobycy) என அழைக்கப்பட்ட நிறுவனமே தற்போது சைப் எலெக்ட்ரிக் எனும் பெயரில் இயங்கி வருகின்றது.

இது நாட்டின் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் மட்டுமே டெலிவரி சேவையைச் செய்து வருகின்றது. இந்த டெலிவரி பணிக்காகவே தற்போது ஆயிரம் யூனிட் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான ஆர்டர் அது கொடுத்திருக்கின்றது. இதற்காக நைக்ஸ் எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டரில் சில மாற்றங்களைச் செய்து தருமாறு ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திடம் அது கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்பட தொடங்கி வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. இந்த நிலையிலேயே தனது பெட்ரோல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கும் முயற்சியில் சைப் எலெக்ட்ரிக் களமிறங்கியுள்ளது. மேலும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக ஹீரோ எலெக்ட்ரிக்-இன் நைக்ஸ் எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் முயற்சியிலும் அது இறங்கியிருக்கின்றது.

இதன் முன்னோட்டமாகவே தற்போது ஆயிரம் மின்சார ஸ்கூட்டர்களுக்கான ஆர்டரை அது கொடுத்துள்ளது. இதுதவிர 2025ம் ஆண்டிற்குள் அனைத்து எரிபொருள் வாகனங்களையும் மின்சார இருசக்கர வாகனங்களாக மாற்ற இருப்பதாக அது அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் காற்று மாசு மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகிய பிரச்னைகளில் இருந்து தீர்வு காண வேண்டுமெனில், மின்சார வாகன பன்பாட்டிற்கு மாறுவது மட்டுமே தீர்வாகும்.

இதைக் கருத்தில் கொண்டு அமேசான், உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் சேவையில் மின்சார வாகனங்களைக் களமிறக்கத் தொடங்கியிருக்கின்றன. அந்தவகையிலேயே, புதுமுக நிறுவனமான சைப் எலெக்ட்ரிக் தற்போது மின்சார இருசக்கர வாகனங்களை தனது சேவையில் ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் நைக்ஸ்-எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 64,640 என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். பிராண்டின் புதிய 'எச்எக்ஸ்' சீரிஸை விரிவுப்படுத்தும் ஹீரோ எலெக்ட்ரிக் இதனை இந்தியாவில் களமிறக்கியுள்ளது. மேலும், இந்த மின்சார ஸ்கூட்டரில் சிறந்த திறன்பாட்டிற்காக 0.6 கிலோவாட்ஸ் திறன் கொண்ட மின் மோட்டாரை பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன், 1.53kWh லித்தியம்-அயன் பேட்டரி தொகுப்பை மின் மோட்டாரின் மின் விநியோகத்திற்காக பொருத்தியுள்ளது. இது மின் மோட்டாரை மணிக்கு 42கிமீ எனும் வேகத்தில் இயங்க உதவும். இதுவே நைக்ஸ் எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் உச்சபட்ச வேகம் ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 210 கிமீ வரை பயணிக்கலாம் என கூறப்படுகின்றது. முற்றிலும் வணிக ரீதியிலான பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த எதிர்பார்ப்பு ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தை நல்ல பலனைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இதன் ஆரம்ப புள்ளியாகவே சைப் எலெக்ட்ரிக் தற்போது வழங்கியிருக்கும் ஆயிரம் யூனிட்டுகள் நைக்ஸ் எச்எக்ஸ் மின்சார ஸ்கூட்டருக்கான ஆர்டர் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இதேபோன்று பிற நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








