பிஎஸ்4 பைக்குகளை விற்க அதிரடியாக முடிவெடுத்த டீலர்ஷிப்கள்... இனியாவது விற்பனை பெருகுமா...?
இந்தியாவில் குறிப்பிட்ட சில டீலர்ஷிப்களில் ஹீரோ நிறுவனத்தின் எச்எஃப் டீலக்ஸ் மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் மாடல்களின் பிஎஸ்4 வெர்சன்களுக்கு ரூ.10,000 அளவில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்த தகவல்களை முழுமையாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எச்எஃப் டீலக்ஸ் பிஎஸ்4 பைக்கின் ஆரம்ப விலையை ரூ.55,925 ஆகவும், ஸ்பிளெண்டர் பிஎஸ்4 பைக்கின் ஆரம்ப விலையை ரூ.59,600 ஆகவும் நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்த இரு பிஎஸ்4 பைக்குகளையும் இனி முறையே ரூ.29,900 மற்றும் ரூ.41,790 விலைகளில் எக்ஸ்ஷோரூமில் பெறலாம்.

இந்த தள்ளுபடிகள் ஸ்டாக்கில் உள்ள ஹீரோவின் இந்த இரு பிஎஸ்4 பைக்குகளுக்கு மட்டுமே. மேலும் இந்த இரு பைக் மாடல்களையும் வெறும் ரூ.200-ல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய முடியும். உச்சநீதிமன்றம் ஸ்டாக்கில் உள்ள 10% பிஎஸ்4 வாகனங்களை விற்று தீர்க்க கடந்த மே 3ஆம் தேதியில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும் இந்த கூடுதல் கால அவகாசம் டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள டீலர்ஷிப்களுக்கு பொருந்தாது. இந்த கூடுதல் அவகாசம் முழுக்க முழுக்க பிஎஸ்4 ஸ்டாக்குகளை முழுவதுமாக விற்பனை செய்து தீர்க்கவே.

ஒருவேளை இந்த காலக்கெடுவுக்குள் எச்எஃப் டீலக்ஸ் மற்றும் ஸ்பிளெண்டர் பிஎஸ்4 பைக்குகள் முழுவதுமாக விற்பனை செய்யப்படவில்லையெனில், மீதமுள்ள பைக்குகளை ஹீரோ நிறுவனம் திரும்ப பெற்று கொள்வதை தவிர வேறெந்த வழியும் இல்லை.

ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்த கால அவகாசம் நிச்சயம் டீலர்ஷிப்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை குறைக்க உதவும். பிஎஸ்6 தரத்திலும் விற்பனை செய்யப்பட்டு வரும் எச்எஃப் டீலக்ஸ் பைக்கின் 97.2சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 8.02 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது.

ஹீரோ ஸ்பிளெண்டர் மாடலில் இதே 97.2சிசி என்ஜின் 8000 ஆர்பிஎம்-ல் 8.01 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. ஸ்பிளெண்டர் மாடல் லிட்டருக்கு 80 கிமீ மைலேஜ்ஜை வழங்குவது குறிப்பிடத்தக்கது. இவற்றின் தள்ளுபடிகள் ஒருபுறம் இருக்க, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த பல வழிகளில் உதவி செய்து வருகிறது.

இந்த வகையில் இந்நிறுவனம் 60 எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்குகளை ஆம்புலன்ஸ் தோற்றத்திற்கு மாடிஃபைடு செய்து மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வருகிறது. அதாவது இந்த பைக்குகள் மூலமாக மருத்துவ உதவி பணியாளர்கள் உதவி தேவைப்படும் மக்களை சந்தித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








