டீலர்களின் வயிற்றில் பால் வார்த்த ஹீரோ மோட்டோகார்ப்!
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு, அதன் டீலர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

கொரோனா வைரஸ் கோரப்பிடியில் சிக்கி மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் பொருளாதார இழப்பையும், இயல்பு வாழ்க்கையைுயும் இழந்து நிற்கின்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் ஆட்டோமொபைல் துறையில் பெரிய இழப்பை கொடுத்து வருகிறது. குறிப்பாக, டீலர்கள் நிலைமை படுமோசமாகி வருகிறது.

கொரோனாவால் டீலர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இருப்பில் தேங்கி இருக்கும் பிஎஸ்4 வாகனங்களை விற்க முடியாமல் பல வாகன டீலர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அண்மையில் இது தொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை 10 நாட்கள் மட்டுமே நீடித்தது.

அத்துடன், இருப்பில் தேங்கி இருக்கும் 10 சதவீத பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் அனுமதி வழங்கி இருக்கிறது. கொரோனா பிடியில் இருக்கும் மக்கள் இருசக்கர வாகனங்களை உடனடியாக வாங்குவதற்கு டீலர்களுக்கு வருவார்களா என்ற நிலையில், ஊரடங்கு முடிந்த 10 நாட்களில் விற்பனை செ்யவது இயலாத காரியம் என்று டீலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், தனது டீலர்களிடம் இருக்கும் பிஎஸ்4 இருசக்கர வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக, அண்மையில் நடந்த தனது டீலர்களுக்கான கூட்டத்தில் முக்கிய அறிவிப்பை ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் வெளியிட்டுள்ளார்.

இதில், இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்கள் குறித்து டீலர்கள் கவலை கொள்ள தேவையில்லை. இருப்பில் தேங்கி இருக்கும் பிஎஸ்4 வாகனங்களை திரும்ப பெறுவது குறித்து விரைவில் உரிய சுற்றறிக்கை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அப்போது அவர் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால், டீலர்களை நேரில் அழைத்து உறுதி அளித்துள்ளதாக லைவ் மிண்ட் செய்தி தெரிவிக்கிறது.

தனது டீலர்களிடம் இருந்து திரும்ப பெறும் பிஎஸ்4 இருசக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே, பிஎஸ்4 வாகனங்களுக்கான காலக்கெடுவை நீடிக்க அவசியமில்லை என்று பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








