இழுபறியில் ஹார்லி டேவிட்சன் - ஹீரோ மோட்டோகார்ப் 'டீல்'... பரபரப்பு காரணங்கள்!
ஹார்லி டேவிட்சன் - ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் தாமதமாகி வருவதற்கான காரணங்கள் வெளியாகி இருக்கின்றன.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பிரிமீயம் வகை க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. உலக அளவில் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை பெரும் பணக்காரர்கள் அந்தஸ்தின் அடையாளரமாக கருதுகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு முதல் இந்தியாவில் கால் பதித்த ஹார்லி டேவிட்சன் முன்னணி பிரிமீயம் பைக் நிறுவனமாக இருந்து வந்தது.

ஹரியானா மாநிலம், பவல் என்ற இடத்தில் மோட்டார்சைக்கிள் ஆலையையும் அமைத்து மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்து வந்தது. உலக அளவில் அமெரிக்காவிற்கு வெளியே அமைக்கப்பட்ட ஒரே ஆலையாகவும் பவல் ஆலை இருந்து வந்தது.

இந்தநிலையில், இந்தியாவில் எதிர்பார்த்த அளவு தனது மோட்டார்சைக்கிள் விற்பனை இல்லை என்று ஹார்லி டேவிட்சன் கருதியது. இதையடுத்து, பவல் ஆலையில் உற்பத்திப் பணிகளை அதிரடியாக நிறுத்தியதுடன், இந்திய சந்தையில் நேரடி மோட்டார்சைக்கிள் விற்பனையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது.

இதனால், ஹார்லி டேவிட்சன் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்றும் டீலர்கள், அதன் பணியாளர்களும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளில் ஹார்லி டேவிட்சன் ஈடுபட்டுள்ளது.

அதாவது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ மோட்டார்சைக்கிள் வினியோகஸ்தராக நியமிக்க ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டது. இதற்காக, இரு நிறுவனங்கள் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் வினியோகஸ்தர் என்பதை தாண்டி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளது. இதற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனம் செவி சாய்க்காமல் இருந்து வருவதால்தான் ஒப்பந்த நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

அதாவது, மோட்டார்சைக்கிள்களை வினியோகம் செய்யும் உரிமை தவிர்த்து, நடுத்தர வகை மோட்டார்சைக்கிள்களுக்கான தொழில்நுட்பத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஹீரோ மோட்டோகார்ப் வலியுறுத்தி வருகிறது. அத்துடன், பைககுகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தையும் கோருவதாக தெரிகிறது. ஆனால், ஹார்லி டேவிட்சன் இதற்கு சம்மதம் தெரிவிக்காமல், தொடர்ந்து பரிசீலனையில் வைத்துள்ளதாக சிஎன்பிசி டிவி-18 தள செய்தி தெரிவிக்கிறது.

எனினும், ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் இடையிலான கூட்டணி குறித்து மிக விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது. முதல்கட்டமாக தாய்லாந்து நாட்டில் இருந்து ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த ஓரிரு வாரத்திற்குள் ஹார்லி டேவிட்சன் - ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே, ஹார்லி டேவிட்சன் திடீரென இந்தியாவில் இருந்து வெளியேறியதால், ஆலை தொழிலாளர்களும், டீலர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் முதலீடு செய்துள்ள டீலர்கள் ஹார்லி முடிவால் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

மறுபுறத்தில் வாடிக்கையாளர்களும் எதிர்காலத்தில் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களுக்கான பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் சப்ளை குறித்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனினும், ஹீரோ மோட்டோகார்ப் கையில் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை உரிமங்கள் வழங்கப்பட்டால், அது வாடிக்கையாளர்களுக்கு ஆசுவாசத்தை தரும் விஷயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications