ஹீரோ நிறுவனத்துடன் இணைய 10 ஹார்லி டேவிட்சன் டீலர்கள் முடிவு
ஹீரோ நிறுவனத்தின் வினியோக கட்டமைப்பில் இணைவதற்கு 10 ஹார்லி டேவிட்சன் டீலர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் பிரிமீயம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் உலக அளவில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக பெயர் பெற்றுள்ளது. இந்தியாவிலும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பல ஆண்டுகளாக மோட்டார்சைக்கிள் விற்பனை செய்து வந்தது. ஹாரியானா மாநிலத்தில் மோட்டார்சைக்கிள் அசெம்பிள் செய்யும் ஆலையையும் நடத்தி வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்று கருதி, நேரடி வர்த்தகத்திலிருந்து வெளியேறுவதாக கடந்த செப்டம்பர் மாதம் திடீரென அறிவித்தது.

இது அந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல கோடி முதலீடு செய்து வர்த்தகம் செய்து வந்த டீலர்களும் செய்வதறியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில், இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் தனது மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதற்கும், சர்வீஸ் செய்வதற்கான பணிகளுக்கு உரிமம் வழங்கி உள்ளது ஹார்லி டேவிட்சன். இதனையடுத்து, வரும் ஜனவரி முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது.

இந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் திடீரென வர்த்தகத்திலிருந்து வெளியேறியதால், அதனை நம்பி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த டீலர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். மேலும், ஹார்லி டேவிட்சன் அறிவித்த இழப்பீடு திட்டம் போதுமானதாக இல்லை என்று கூறி, நியாயமான இழப்பீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் இந்திய டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்தியாவில் செயல்பட்டு வந்த 10 ஹார்லி டேவிட்சன் டீலர்கள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைய முடிவு செய்துள்ளனர்.

வேறு வழியில்லாத நிலையில் அவர்கள் அந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அதேநேரத்தில், மீதமுள்ள டீலர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருக்கிறது. இதனை மனதில் வைத்து ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உரிய இழப்பீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வரும் ஜனவரி முதல் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்யும் பணிகளை துவங்க இருக்கிறது. நாடுமுழுவதும் வினியோக கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

எனினும், மீதமுள்ள 23 ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் டீலர்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்பதால், புதிய டீலர்களை நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








