ஜெர்மனியில் தயாராகும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக்!
ஜெர்மனியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிலையில், தனது போட்டியாளர்களாக உள்ள பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார் ஆகிய நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன.

ஆனால், மின்சார வாகன சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் இன்னமும் களமிறங்கவில்லை. இந்த சூழலில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய மின்சார பைக் மாடலானது ஜெர்மனியில் உள்ள அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக மணிகன்ட்ரோல் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

ஜெய்ப்பூரில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தின் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகளை கேட்டு ஜெர்மனியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையம் இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை உருவாக்கி வருகிறது.

இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலானது e-US (electric Ultra Sport) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் தொடர்பான இதர முக்கிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இது அதிசெயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் பைக் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

இதனிடையே, நவீன் முஞ்சால் தலைமையில் தனி நிறுவனமாக செயல்படும் ஹீரோ எலெக்ட்ரிக் ஏற்கனவே மின்சார இருசக்கர வாகன மார்க்கெட்டில் வலுவாக இருந்து வருகிறது. மேலும், முஞ்சால் குடும்பத்தில் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஹீரோ என்ற பெயரை தனது மின்சார வாகனங்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

எனினும், புதிய பெயரில் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. மேலும், ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தில் அதிக அளவு ஹீரோ மோட்டோகார்ப் முதலீடு செய்துள்ளதுடன், பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கிறது.

எனவே, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தொழில்நுட்பங்கள் ஜெர்மனி நாட்டின் மூனிச் நகரில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அண்மையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கூட்டம் நடந்தது. இதில், பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை குறித்த தருணத்தில் கொண்டு வருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனங்களின் தயாரிப்புகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications








