செம... பெண் போலீசாருக்கு 100 ஸ்கூட்டர்களை அள்ளி கொடுத்த நல்ல உள்ளம்... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க
உத்தர பிரதேச மாநில பெண் போலீசாருக்கு 100 ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) திகழ்ந்து வருகிறது. புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள், இந்தியாவை சேர்ந்த வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மிகப்பெரிய அளவில் பெற்றுள்ளன.

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பட்ஜெட் விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய மற்றும் நீண்ட வருடங்களுக்கு உழைக்க கூடிய இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருவதுடன் மட்டுமல்லாது, சமூக அக்கறை கொண்ட நிறுவனமாகவும் ஹீரோ திகழ்ந்து வருகிறது. அந்நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கை அதற்கு ஒரு சாட்சி.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் காவல் துறையில் வேலை செய்து வரும் பெண் அதிகாரிகளுக்கு, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது 100 ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளது. இந்த தகவலை ஹீரோ நிறுவனம் இன்று (ஜூலை 6ம் தேதி) வெளியிட்டது. டெஸ்ட்டினி 125 (Destini 125) மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 (Maestro Edge 125) ஆகிய ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

காவல் துறைக்கு தேவையான ஆக்ஸஸெரிகளுடன் இந்த ஸ்கூட்டர்களை ஹீரோ நிறுவனம் வழங்கியிருப்பது கூடுதல் சிறப்பு. இதன்படி ஜிபிஎஸ் சிஸ்டம், சைரன்கள், ஃப்ளாஷ்லைட்கள், பொதுமக்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதற்கான அமைப்பு ஆகியவை இந்த ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பெப்பர் ஸ்பிரே உள்பட காவல் துறைக்கு தேவையான மற்ற ஆக்ஸஸெரிகளும் இடம்பெற்றுள்ளன.

சிறப்பு 'ஷெர்னி டஸ்டா' (Sherni Dasta - பெண் சிங்கங்களின் அணி) படையை சேர்ந்த பெண் போலீசார் ரோந்து பணிகளுக்கு இந்த ஸ்கூட்டர்களை பயன்படுத்துவார்கள். அதே சமயம் தனது சிஎஸ்ஆர் (Corporate Social Responsibility - CSR) நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக காவல் துறையுடன் இணைந்து 'சஹி' (Project Sakhi) என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதாகவும் ஹீரோ தெரிவித்துள்ளது.

பெண் போலீசாருக்கு இரு சக்கர வாகனங்களை வழங்குவதன் மூலம், அவர்களின் பயணங்களில் இருக்கும் பிரச்னைகளை களைவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இந்தியாவின் 11 மாநிலங்களை சேர்ந்த காவல் துறைகளுக்கு, 2,900க்கும் மேற்பட்ட டூவீலர்களை வழங்கியிருப்பதாகவும் ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.

இதில், உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, தெலங்கானா, ஹரியானா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம், கர்நாடகா, ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் காவல் துறைகள் அடங்கும். இதுதவிர புதுச்சேரி யூனியன் பிரதேச காவல் துறைக்கும், ஹீரோ நிறுவனம் இரு சக்கர வாகனங்களை வழங்கியுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு காவல் துறையினர் மட்டுமல்லாது, பொது மக்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த நடவடிக்கைகள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு நற்பெயரை சம்பாதித்து தரும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








