அடேங்கப்பா... பண்டிகை காலத்தில் ஹீரோ எவ்வளவு டூவீலர்களை விற்பனை செய்துள்ளது தெரியுமா?
பண்டிகை காலத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எவ்வளவு இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது? என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சமீபத்தில் முடிவடைந்த பண்டிகை காலம், இந்தியாவில் பல்வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கி விட்டு சென்றுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக ஏற்பட்ட சரிவில் இருந்து ஏராளமான வாகன நிறுவனங்கள் மீண்டு வந்துள்ளன. பண்டிகை காலத்தை பயன்படுத்தி கொண்டு அவை சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.

இதில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒன்று. இந்த பண்டிகை காலத்தில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நேற்று (நவம்பர் 18) வெளியிட்டது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக நடப்பாண்டில் பல்வேறு இடையூறுகளை வாகன நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருந்தது. இதற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் விதிவிலக்கு அல்ல. இருந்தாலும் பண்டிகை காலத்தை பயன்படுத்தி கொண்டு இவ்வளவு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஹீரோ மோட்டோகார்ப் பதிவு செய்துள்ளது.

நவராத்திரியின் முதல் நாள் மற்றும் பாய் தூஜ் பண்டிகையின் இறுதி நாள் ஆகியவற்றுக்கு இடையேயான 32 நாள் பண்டிகை காலத்தில் இந்த சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஹீரோ மோட்டோகார்ப் ஈட்டியுள்ளது. பண்டிகை காலம் தவிர கொரோனா வைரஸ் அச்சமும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயர்விற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் ஏப்ரல், மே மாதங்களில் வாகன விற்பனை அடியோடு சரிந்தது. ஆனால் அதன்பின் வந்த மாதங்களில் அதே கொரோனா வைரஸ் காரணமாக வாகன விற்பனை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியது.

பேருந்து, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால் கொரோனா தொற்று ஏற்படலாம் என்பதால், சொந்த வாகனங்களில் பயணம் செய்வதற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினர். இதன் காரணமாக இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயர்வடைந்தது.

இதுதவிர பொது போக்குவரத்து வாகனங்களுக்கு நிலவிய பற்றாக்குறையும், சொந்தமாக குறைந்தபட்சம் இரு சக்கர வாகனத்தையாவது வாங்க வேண்டிய கட்டாயத்தை பலருக்கு ஏற்படுத்தியது. இவற்றுடன் பண்டிகை காலமும் ஒன்று சேர, கிட்டத்தட்ட அனைத்து வாகன நிறுவனங்களும் சரிவில் இருந்து ஓரளவிற்கு மீண்டு வந்துள்ளன.

ஹீரோ நிறுவனத்தை பொறுத்தவரை 100 சிசி ஸ்பிளெண்டர் ப்ளஸ் மற்றும் ஹெச்எஃப் டீலக்ஸ், 125 சிசி மோட்டார்சைக்கிள்களான கிளாமர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் பிரீமியம் செக்மெண்ட்டில் எக்ஸ்பல்ஸ் வரிசை பைக்குகளின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக பண்டிகை காலத்தில் இந்த விற்பனை எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








