பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்படவில்லை... இந்தியாவில் இருந்து விடைபெறும் ஹோண்டா ஏவியேட்டர் & க்ரேஸியா..
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் சந்தையில் விற்பனையில் இருந்த ஏவியேட்டர் மற்றும் க்ரேஸியா ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனையை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்த இரு ஸ்கூட்டர்களின் பெயர்கள் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஹோண்டா நிறுவனம் ஏவியேட்டர் மற்றும் க்ரேஸியா மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியதற்கு மிக முக்கிய காரணம், இவ்விரு மோட்டார்சைக்கிள்களும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படவில்லை.

இதில் ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.59,180 ஆக உள்ளது. இந்த ஸ்கூட்டர் மாடலில் 109.19சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.77 என்எம் டார்க் திறனையும் ஸ்கூட்டருக்கு வழங்கி வருகிறது.

ஏவியேட்டர் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 4-இன்-1 லாக்கிங் சிஸ்டம், இருக்கைக்கு அடியில் 20-லிட்டர் சேமிப்பிடம், யுபிஎஸ் சார்ஜிங் போர்ட், அலாய் சக்கரங்கள், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்ஸ் மற்றும் கோம்பி-ப்ரேக் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை ஹோண்டா நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

சந்தையில் ரூ.63,269-ஐ விலையாக கொண்டுள்ள க்ரேஸியா மாடல் ஏவியேட்டர் ஸ்கூட்டரை விட சிறிது ப்ரீமியமாக பார்க்கப்படுகிறது. க்ரேஸியா ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 124.9சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 8.52 பிஎச்பி மற்றும் 10.54 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

இந்த ஸ்கூட்டர் மாடலானது, முழு-டிஜிட்டலில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முன்புறத்தில் க்ளோவ் பாக்ஸ், இருக்கைக்கு அடியில் 18-லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பிடம் மற்றும் 4-இன்-1 லாக்கிங் சிஸ்டம் போன்ற அமசங்களை கொண்டுள்ளது.

இந்த இரு ஹோண்டா ஸ்கூட்டர்களும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுவிடும் என வாடிக்கையாளர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட் செய்யப்படாததால் விற்பனை நிறுத்தத்தை சந்தித்துள்ளன.

நாடு முழுவதும் தற்சமயம் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் பெரும்பான்மையான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தொழிற்சாலைகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே மூடிவிட்டன. இது கூட ஏவியேட்டர் மற்றும் க்ரேஸியா மாடல்களின் பிஎஸ்6 அப்டேட் பணிகளின் தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம்.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி புதிய மாசு உமிழ்வு விதி இந்தியாவில் அமலுக்கு வந்தது. இதற்கு முன்பாகவே ஸ்டாக்கில் உள்ள பிஎஸ்4 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் அதன் பின் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் இந்த காலக்கெடு ஏப்ரல் 24 வரை நீட்டிக்கப்பட்டது.

இருப்பினும் கடந்த 1ஆம் தேதியில் இருந்து தற்போது வரை ஒரு பிஎஸ்4 வாகனம் கூட சந்தையில் விற்கப்பட்டதாக தகவல் இல்லை. இதனால் ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் நேராக பிஎஸ்6 வாகனங்களின் தயாரிப்பு பணியில் இறங்கவுள்ளன.

இந்த வகையில் ஏவியேட்டர் மற்றும் க்ரேஸியா மாடலின் பிஎஸ்6 வெர்சன் ஸ்கூட்டர்களின் தயாரிப்பில் ஹோண்டா நிறுவனம் விரைவில் ஈடுப்படவுள்ளதா என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

பிஎஸ்4 வாகனங்களை விற்க இயலாத சூழல் தற்சமயம் நிலவுவதால் ஏவியேட்டர் மற்றும் க்ரேஸியா மாடல்களின் பெயர்களை ஹோண்டா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கியிருப்பது சரியான முடிவே. இவற்றின் பிஎஸ்6 மாடல்களின் தயாரிப்பு வேலைகள் துவங்கியவுடன் இந்த இரு ஸ்கூட்டர் மாடல்களின் பெயர்களை மீண்டும் இந்நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications








