விற்பனையில் கெத்துகாட்டும் பிஎஸ்6 ஹோண்டா டூவீலர்கள்... பொறாமையில் போட்டி நிறுவனங்கள்..!
பிரபல ஹோண்டா நிறுவனத்தின் பிஎஸ்6 தரத்திலான டூவீலர்கள் விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய மாசு உமிழ்வு விதியான பிஎஸ்-6 நாடு முழுவதும் அமலுக்கு வரவிருக்கின்றது. எரிபொருள் வாகனங்களினால் ஏற்படும் பின்விளைவைக் குறைக்கும் விதமாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் பிஎஸ்6 தரக்கட்டுப்பாடும் ஒன்று.

ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிக தீவிரமாக அதன் பிரபல தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமாக அப்கிரேட் செய்து வருகின்றன.
அதேசமயம், குறிப்பிட்ட விற்பனை குறைவாக பெற்று வரும் மாடல்களைச் சந்தையை விட்டு வெளியேற்றியும் வருகின்றன.

பிஎஸ்-4 தரத்தைக் காட்டிலும் பிஎஸ்-6 தரம் சற்று கூடுதல் செலவீணத்தைக் கொண்டதாக உள்ளது. இந்தநிலையில், ஏற்கனவே விற்பனை விகிதத்தைக் குறைவாகப் பெற்று வரும் மாடல்கள் பிஎஸ்-6 தர உயர்வால் அதிக விலையை அடையும். இது துளியளவும் உற்பத்தி நிறுவனத்திற்கு பயனளிக்காது என வெளியேற்றும் நடவடிக்கையில் உற்பத்தி நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.

இவ்வாறு, இந்திய வாகனச் சந்தையே பிஎஸ்-6 அப்கிரேட் பணியில் மிக தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேலையில், ஹோண்டா நிறுவனத்தின் பிஎஸ்-6 தரத்திலான இருசக்கர வாகனங்களின் விற்பனை பற்றியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இந்திய வாகனச் சந்தைக்கே மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கிடைத்திருக்கும் இந்த தகவலின்படி, பிஎஸ்-6 தரம் கொண்ட ஹோண்டாவின் இருசக்கர வாகனங்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது உறுதியாகியிருக்கின்றது.

பிஎஸ்-6 தரம் கொண்ட வாகனங்கள் சுற்றுப்புழச்சூழலுக்கு லேசான கேடையே விளைவிக்கும். அதோடு, மிக குறைந்த பராமரிப்புச் செலவைக் கொண்டதாகவும் இருக்கின்றது.
குறிப்பாக, பிஎஸ்-6 தரம் கொண்ட எஞ்ஜின்கள் ப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால், குறைந்த எரிபொருளில் அதிக மைலேஜை வழங்கக்கூடியவையாக இருக்கின்றன.

இதுவே, இந்தியர்கள் மத்தியில் ஹோண்டாவின் பிஎஸ்-6 தர வாகனத்திற்கு நல்ல வரேவற்பு கிடைக்க முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஹோண்டா நிறுவனம், இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மற்ற வாகன உற்பத்தி நிறுவனங்களைப் போலவே, அதன் பிரபல இருசக்கர வாகனங்களை பிஎஸ்-6 தரத்திற்கு அப்கிரேட் செய்வதில் அதிதீவிரம் காட்டி வருகின்றது.

ஹோண்டாவின் இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் தற்போது இந்திய டூவீலர் சந்தையில் கிடைத்திருக்கின்றது. அதன் பிஎஸ்-6 வாகனங்கள் மட்டுமே இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இதனால், மற்ற போட்டி நிறுவனங்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளன.

தற்போது ஹோண்டா நிறுவனத்தின்கீழ் விற்பனையாகும் ஆக்டிவா 125, எஸ்பி 125, ஆக்டிவா 6ஜி, டியோ மற்றும் ஷைன் உள்ளிட்ட மாடல்களே பிஎஸ்-6 தரத்திற்கு இணைக்கமாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன.
இதை வைத்து பார்க்கையில், ஹோண்டா தற்போது 100 சதவீதம் பிஎஸ்-6 இணக்கமான வாகன தயாரிப்பிற்கு அடியெடுத்து வைத்திருப்பது உறுதியாகியிருக்கின்றது.

ஹோண்டாவின் பிஎஸ்6 வாகனங்களுக்கான அமோகமான வரவேற்புகுறித்து அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான மூத்த துணைத் தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா கூறியதாவது,
"பிஎஸ்-6 மாற்றத்திற்கான காலக்கெடு முடிவடைவதற்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையிலேயே ஹோண்டா அதன் அனைத்து தயாரிப்புகளையும் பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமாக மாற்றி வருகின்றது. இதனாலயே 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இப்போது ஹோண்டாவின் அதிக தொழில்நுட்பமுடைய வாகனங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்" என்றார்.

இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக ஆறு ஆண்டுகள் வாரண்டியை கூடுதலாக வழங்க ஹோண்டா திட்டமிட்டிருக்கின்றது. அதில், ஆறு ஆண்டுகள் வாடிக்கையான வாரண்டியாகவும், அடுத்த ஆறு ஆண்டுகள் ஆப்ஷனலாகவும் வழங்கப்பட இருப்பதாக குலேரியா தெரிவித்தார்.

இத்துடன், கூடுதல் கவர்ச்சிகரமான அறிவிப்பாக ரூ. 10 ஆயிரம் சலுகையுடன் கூடிய நிதி திட்டங்களும் அறிவிக்கப்பட இருக்கின்றது. இது ஹோண்டாவின் பிஎஸ்6 வாகன விற்பனைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








