இந்திய பயணத்தை முடித்து கொண்டது ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டர்... இணைய பக்கத்தில் இருந்து பெயர் நீக்கம்...
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் க்ளிக் மாடலை அதன் இந்திய தயாரிப்பு லைன்அப்-ல் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டர் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட போவதில்லை என்பதால் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டில் க்ளிக் மாடலின் இந்திய விற்பனை நிறுத்தத்தை உறுதி செய்திருந்தது. மேலும் இந்த பைக்கை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்வதற்கான எந்த திட்டமும் தங்களிடத்தில் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தி இருந்தது.

இருப்பினும் தற்போதைக்கு ஸ்டாக்கில் உள்ள அனைத்து க்ளிக் ஸ்கூட்டர்களையும் விற்று தீர்க்க இந்நிறுவனம் முயற்சிகளை எடுத்து வருகிறது. புதிய மாசு உமிழ்வு விதி கடந்த 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்ததால், தற்போது ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டர் தனது இந்திய பயணத்தை நிறைவு செய்துள்ளது.

புதிய மாசு உமிழ்வு விதியை காட்டிலும் இந்த ஸ்கூட்டரின் விற்பனை நிறுத்தத்திற்கு மிக முக்கிய காரணம், இதன் குறைவான எண்ணிக்கை தான் ஆகும். ஹோண்டா க்ளிக், இந்திய சந்தையில் எண்ட்ரீ-லெவல் ஸ்கூட்டர் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் டியோ & ஆக்டிவா போன்ற பிரபலமான ஸ்கூட்டர் மாடல்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் இந்த ஸ்கூட்டரால் வாடிக்கையாளர்களை பெரிதாக கவர முடியவில்லை.

க்ளிக் ஸ்கூட்டரில் 109.19சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. ஹோண்டாவின் மற்ற சில ஸ்கூட்டர் மாடல்களிலும் உள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.94 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

க்ளிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சமீபத்தில் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படாத பிஎஸ்4 மோட்டார்சைக்கிள்களின் பெயர்களையும் நீக்கி இருந்தது. இதில் க்ரேஸியா மற்றும் சிபி ஹார்னெட் 160ஆர் போன்ற மோட்டார்சைக்கிள் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு மீண்டும் விற்பனையை துவங்கவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணவும்.

இதனால் தற்சமயம் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் உள்ள அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களும் பிஎஸ்6 தரத்தில் தான் உள்ளன. இதில் முதல் பிஎஸ்6 மாடலாக ஆக்டிவா 125 சந்தையில் அறிமுகமானது. அதன்பின் யூனிகார்ன், சிபிஷைன், ஆக்டிவா 6ஜி மற்றும் டியோ போன்ற மாடல்களுக்கு முன்பாக சிபி125 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6 தரத்தில் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது.

பிஎஸ்4 வாகனங்களை இந்திய சந்தையில் விற்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டாலும், தற்சமயம் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் எந்தவொரு நிறுவனமும் பிஎஸ்4 வாகனத்தை இந்த மாதத்தில் விற்பனை செய்தததாக தகவல் இல்லை. இதே நிலை தொடர்ந்து நீடிப்பது போல் உள்ளதால் ஹோண்டா நிறுவனம், டீலர்ஷிப்களிடம் ஸ்டாக்கில் உள்ள பிஎஸ்4 வாகனங்கள் திரும்ப பெறப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.


Click it and Unblock the Notifications








