பட்டைய கிளப்பும் ஹோண்டா... மிரண்டுபோன போட்டி நிறுவனங்கள்... எப்படிங்க இவங்களால மட்டும் முடியுது!
ஹோண்டா நிறுவனம் அதன் போட்டி நிறுவனங்களை மிரள வைக்கின்ற வகையில் விற்பனையில் பட்டைய கிளப்பியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய ஆட்டோ மொபைல்ஸ்துறை அதன் வரலாற்றிலேயே இல்லாத வகையிலான ஓர் பின்னடைவை கடந்த காலங்களில் சந்தித்தது. இது, இந்திய ஆட்டோத்துறைக்கு மட்டுமே ஏற்பட்ட நிலை என்று கூறிவிட முடியாது. உலக நாடுகள் அனைத்திற்கும் இதே நிலைதான்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஒரு யூனிட்டைக் கூட விற்க முடியாமல் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தவித்து வந்தன. இதனால், பல நிறுவனங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டது. இந்நிலையைக் கருத்தில் கொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் கடந்த மே மாதத்தில் லேசான தளர்வை வழங்கின.

இதனால் நாட்டின் குறிப்பிட்ட துறைகள் மட்டும் மீண்டும் இயக்க நிலைக்கு திரும்பின. அப்படியாக இயக்க நிலைக்கு திரும்பிய துறையில் ஆட்டோமொபைல்துறையும் ஒன்றாகும்.
என்னதான் இவை இயக்க நிலைக்கு திரும்பினாலும் முந்தைய காலகட்டத்தைப் போலில்லாமல், குறைந்த ஆட்கள், அதிக பாதுகாப்பு வழிமுறைகள் என பல கட்டுப்பாடுகளுடன் அவை இயங்க ஆரம்பித்தன.

அவ்வாறு அதிக கட்டுப்பாடுகளுடன் இயங்க ஆரம்பித்த நிறுவனத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மிகக் கடுமையாக பாதித்தது என்றே கூறலாம். எப்போதுமே விற்பனையின் உச்சத்தில் இருக்கும் இந்நிறுவனம் முழு ஊரடங்கு காலத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனால், இந்த நிலை தற்போது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. அதாவது, கடந்த காலத்தில் விட்டுபோன விற்பனை எல்லாம் மீண்டும் அதே நிறுவனத்திற்கு வந்து சேருகின்ற வகையில் விற்பனை அமோகமாக கிடைக்க ஆரம்பித்துள்ளது. அதிலும், மிக முக்கியமாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு சற்று கூடுதல் வரவேற்பு கிடைத்து வருகின்றது.

ஹோண்டா நிறுவனம், கடந்த ஜூன் 2020இல் ஒட்டுமொத்தமாக 2,10,879 யூனிட்டுகளை விற்பனைக்காக வெளியேற்றியுள்ளது. இதில், 2,02,837 யூனிட்டுகள் உள்நாட்டுச் சந்தைக்காக ஏற்றுமதிச் செய்யப்பட்ட யூனிட்டுகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று 8,042 யூனிட்டுகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டை ஆகும். இது கடந்த மே 2020 மாதத்தைக் கைட்டிலும் 275.62 சதவீத அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும்.

அதுவே, 2019ம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது மிகக் கடுமையான விற்பனை வீழ்ச்சியாகும். 2019 ஜூன் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 4,50,888 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருந்தது. இதனுடன் 2020 ஜூனை ஒப்பிட்டால் 55 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும். அதாவது, 2.48 லட்சம் யூனிட்டுகள் குறைவாகும். இருப்பினும், கொரோனாவின் இக்கட்டான சூழ்நிலையில் தற்போது விற்பனை எண்ணிக்கை மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.

பிற நிறுவனங்கள் இதுபோன்ற விற்பனை இலக்கைக்கூட தொட முடியாமல் தவித்து வருகின்றன. அதேசமயம், ஹோண்டாவின் தற்போதைய விற்பனையில் மிக அதிக எண்ணிக்கையை ஹோண்டா ஆக்டிவாவே பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், அதுகுறித்த முழுமையான விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதன் புண்ணியத்தாலயே ஹோண்டா நிறுவனம் தற்போது அதிக விற்பனையைப் பெற்ற நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றது.

ஹோண்டா நிறுவனம் இந்த இடத்தை பிடிப்பதற்காக பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியது. அதன்படி, வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக இலவச சேவைகள் சிலவற்றை அறிவித்தது. மேலும், வாரண்டி மற்றும் சர்வீஸ் ஆகியவற்றிற்கான காலத்தை கூடுதலாக உயர்த்தி வழங்கியது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளினாலயே ஹோண்டா நிறுவனம் இந்த இடத்தைப் பிடித்திருக்கின்றது.

ஹோண்டா நிறுவனம் அண்மையில்தான் ஆக்டிவா ஸ்கூட்டரை பிஎஸ்6 தரத்திற்கு உயர்த்தி அறிமுகம் செய்தது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் சற்று ஸ்போர்ட்டியான ஸ்டைலைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று, ஹோண்டா நிறுவனம் அதன் மற்றுமொரு புகழ்வாய்ந்த மாடலான கிரேஸியாவையும் ஸ்போர்ட்டி லுக்கில் அப்டேட் செய்து அறிமுகம் செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








