சும்மா பட்டைய கௌப்புறாங்க... தரமான சம்பவத்தை செய்த ஹோண்டா... என்னனு தெரியுமா?
ஊரடங்கு தளர்வுக்கு பின், அன்றாட செயல்பாடுகளை மீண்டும் தொடங்கிய உடனேயே தரமான சம்பவம் ஒன்றை ஹோண்டா செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினத்தில் இருந்து இந்தியா முழுவதும் வாகன உற்பத்தி நடக்கவில்லை. அத்துடன் டீலர்ஷிப்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. ஆனால் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக கடந்த மே முதல் வாரத்தில் இருந்து இந்தியாவில் வாகன உற்பத்தி மீண்டும் தொடங்கியது. அத்துடன் டீலர்ஷிப்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. வாகன தொழிற்சாலைகள் மற்றும் ஷோரூம்களில் மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தற்போது தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்தசூழலில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle and Scooter India) நிறுவனத்தின் கடந்த மே மாத செயல்பாடுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி ஹோண்டா நிறுவனம் கடந்த மே மாதத்தில், ஒட்டுமொத்தமாக 54,820 டூவீலர்களை தொழிற்சாலைகளில் இருந்து அனுப்பியுள்ளது.

இதில், 54,000 டூவீலர்கள் உள்நாட்டில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் 820 டூவீலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். விற்பனையை பொறுத்தவரை கடந்த மே மாதத்தில், ஹோண்டா நிறுவனம் மொத்தம் 1.15 லட்சம் டூவீலர்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் இந்தியா முழுவதும் உள்ள ஹோண்டா ஒர்க்ஷாப்களில் 10.50 லட்சம் டூவீலர்கள் சர்வீஸ் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பிஎஸ்-6 வாகனங்களின் விற்பனையில் புதிய மைல்கல் ஒன்றையும் ஹோண்டா நிறுவனம் கடந்த மே மாதத்தில் எட்டியுள்ளது. ஹோண்டா நிறுவனம் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்-6 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் பிஎஸ்-6 டூவீலர்கள் விற்பனையில் இது ஒரு புதிய உச்சமாகும்.

தற்போதைய நிலையில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஹோண்டா டீலர்கள் தங்கள் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவும் அச்சம் இருப்பதால், தற்போதைய நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியமாகிறது. எனவே ஹோண்டா டீலர்கள் பலர் டிஜிட்டல் வழியில்தான் தற்போது தங்கள் வாடிக்கையாளர்களை அணுகுகின்றனர்.

டெஸ்ட் டிரைவ் வசதிகளை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவது, வாகனங்களை டோர் டெலிவரி செய்வது போன்ற நடவடிக்கைகளை நாடு முழுவதும் உள்ள ஹோண்டா டீலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் ஆலோசனைகளை வழங்குவது, ஆன்லைன் மூலம் தயாரிப்புகளை தேர்வு செய்ய உதவுவது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

அத்துடன் பேமெண்ட்டும் ஆன்லைன் மூலம் பாதுகாப்பான வழியில் பெறப்படுகிறது. இதன் மூலமாக வரும் மாதங்களில் விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பும் என ஹோண்டா நிறுவனம் நம்புகிறது. மக்கள் சொந்த வாகனங்களில் பயணிக்க விரும்புவதை ஆய்வு முடிவுகள் தெரிவித்து வருவதும் ஹோண்டாவின் நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது.

பஸ், ரயில், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அதற்கு பதிலாக தங்கள் சொந்த வாகனத்தில் பயணம் செய்வதை மக்கள் பாதுகாப்பாக கருதுகின்றனர். இதன் காரணமாக வரும் மாதங்களில் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








