அத்தியாவசியப் பணியாளர் நலனில் அக்கறையுடன் ஹோண்டா எடுத்த சூப்பர் முடிவு!
கொரோனா வைரஸ் தடுப்புப் போரில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் நலன் கருதி முக்கிய முடிவை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னையால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காரணமாக, மக்களின் இயல்பு நிலை முற்றிலும் முடங்கி இருக்கிறது. அதேநேரத்தில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் வங்கிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், இதுபோன்ற அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டு ஈடுபட்டுள்ளோர் நலனை கருத்தில் கொண்டு கேரளாவில் இயங்கி வரும் தனது கீழ் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட 50 சர்வீஸ் மையங்களை வாரத்தில் இரண்டு நாள் திறக்க ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, வாரத்தில் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சர்வீஸ் மையங்கள் செயல்படும். அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ளோரின் வாகனங்களை பழுது நீக்குவதற்கு இந்த சர்வீஸ் மையங்கள் உதவிகரமாக இருக்கும்.
கேரள அரசின் வழிகாட்டு முறைகளின்படி இந்த சர்வீஸ் மையங்கள் செயல்படும். அத்துடன், தனது பணியாளர்களின் பாதுகாப்புக்காக கொரோனா தடுப்புப் பணிகளுக்கான வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு முறைகளின்படி சர்வீஸ் செய்யும் பணிகள் நடைபெறும் என்று ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த 50 இருசக்கர வாகன சர்வீஸ் மையங்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்றும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வீஸ் சூப்பர்வைசர், மெக்கானிக்குகள், காசாளர், பாதுகாப்பு பணியாளர்கள் என அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவர். அத்துடன், முக கவசம் அணிந்து பணியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குனர் யத்வீந்தர் சிங் குலேரியா கூறுகையில்,"இந்த சவாலான சமயத்தில் ஒரு பொறுப்புள்ள கார்ப்பரேட் நிறுவனமாக இருப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். கேரளாவில் குறிப்பிட்ட இடங்களில் எங்களது பணிகளை துவங்கி இருப்பது நல்ல விஷயமாக கருதுகிறோம்.
இந்த இக்கட்டான சூழலில், கேரளாவில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு நன்றி பாராட்டுகிறோம். அவ்வாறு அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு குறித்த நேரத்தில் சேவை வழங்குவதில் எமது நிறுவனமும், பணியாளர்களும் மகிழ்ச்சி கொள்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
கேரள அரசின் வழிகாட்டுதல்களின்படி, வாடிக்கையாளர்களுக்கு பிக்கப் அண்ட் டிராப் வசதி இப்போது வழங்கப்படாது. சிறிய அளவிலான பழுது நீக்கு பணிகள் மட்டுமே செய்து தரப்படும். ஆன்லைன் பண பரிவர்த்தனை முறையும் கடைபிடிக்கப்படும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








