புதிய 200சிசி பைக்கை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா திட்டம்!
இந்தியாவுக்காக புத்தம் புதிய 200 சிசி பைக் மாடலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் மிகவும் வலிமையான போட்டியாளராக இருந்து வருகிறது. அதிக செயல்திறனும், அதிர்வுகள் இல்லாத மென்மையான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் ஹோண்டா பைக்குகளின் எஞ்சின் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் பட்ஜெட் பைக்குகள், ஸ்கூட்டர்கள், ஸ்போர்ட்ஸ் பைக்குகள், சூப்பர் பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தக வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், புதிய பைக் மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இதில், புத்தம் புதிய 200சிசி பைக் மாடலை இந்தியாவுக்காக ஹோண்டா உருவாக்கி வருவதாக பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இதுதவிர்த்து, புதிய 160சிசி மற்றும் 300சிசி ரக பைக் மாடல்களையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டமும் ஹோண்டா வசம் உள்ளது.

இந்தியாவில் வெற்றிகரமான பைக் மாடலாக வலம் வரும் ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கின் அடிப்படையில் புதிய 200 சிசி மாடல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

எனவே, டிசைன் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில், இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும். அதேபோன்று, செயல்திறனிலும் மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா நிறுவனத்தின் புதிய 200சிசி பைக் மாடலானது சிங்கிள் சிலிண்டர் மற்றும் ஏர்கூல்டு சிஸ்டம் கொண்டதாக இருக்கும்.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20 பிஎச்பி பவரையும், 23 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும்.

ஹோண்டாவின் புதிய 200சிசி பைக் மாடல்கள் ஸ்ட்ரீட் ஃபைட்டர், ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்கள் மற்றும் அட்வென்ச்சர் பைக் மாடல்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 200 மற்றும் பல்சர் 200என்எஸ் ஆகிய பைக் மாடல்களுக்கு ஹோண்டாவின் புதிய 200சிசி மாடல் போட்டியாக இருக்கும்.
குறிப்பு: மாதிரிக்காக ஹோண்டா ஹார்னெட் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








