4 புதிய 500சிசி பைக் மாடல்களை இந்தியாவில் களமிறக்குகிறது ஹோண்டா!
இந்தியாவின் நடுத்தர வகை பிரிமீயம் பைக் மார்க்கெட்டை அதகளப்படுத்த ஹோண்டா முடிவு செய்துள்ளது. இதற்காக, தனது 4 புதிய 500 சிசி பைக் மாடல்களை இந்தியாவில் களமிறக்க உள்ளது.

இந்திய பைக் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய பைக் நிறுவனமாக ஹோண்டா விளங்குகிறது. ஹோண்டா நிறுவனத்தின் அதிர்வுகள் குறைவான செயல்திறன் மிக்க எஞ்சின்கள் வாடிக்கையாளர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது.

தற்போது பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் சிறந்து விளங்கும் ஹோண்டா நிறுவனம் பிரமீயம் வகை மார்க்கெட்டிலும் குறிப்பிடத்தக்க விற்பனையை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் நடுத்தர வகை பைக் மார்க்கெட்டிலும் புகுந்து விளையாட திட்டமிட்டுள்ளது.

அண்மையில் நடந்த ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் அறிமுக விழாவில், 500 சிசி ரகதத்தில் 4 புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். இது நடுத்தர வகை பைக் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

மேலும், உலக அளவில் விற்பனையில் உள்ள தனது 4 புதிய 500 சிசி மாடல்களையும் இந்தியாவில் கொண்டு வந்து இறக்கவும் திட்டமிட்டுள்ளது. ஹோண்டா ரிபெல் 500, சிபி500எக்ஸ், சிபிஆர்500ஆர் மற்றும் சிபி500எஃப் ஆகிய நான்கு பைக் மாடல்களும் இந்தியா வர இருக்கின்றன.

இதில், ஹோண்டா ரிபெல் 500 பைக் நீண்ட தூர பயணங்களுக்கு உகந்த க்ரூஸர் வகை மாடலாக இருக்கும். ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மாடலுக்கு போட்டியாக இருக்கும். விலை சாதாரண மாடல்களைவிட பிரிமீயமாக நிர்ணயிக்கப்படும். அதாவது, ரூ.4.5 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா சிபிஆர்500ஆர் மாடலானது ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் ரகத்தை சேர்ந்ததாக இருக்கும். இதன் நேக்கட் வெர்ஷன்தான் சிபி500எஃப் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

நான்காவது மாடலான சிபி500எக்ஸ் பைக் அட்வென்ச்சர் டூரர் வகையை சேர்ந்ததாக இருக்கும். இதன் ரகத்தில் சிறந்த தேர்வாக கொண்டு வருவதற்கும், சற்றே பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்துவதற்கும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

இந்த 4 பைக்குகளிலும் 471 சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 45.5 பிஎஸ் பவரையும், 44.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் தரும் வகையில் இருக்கும்.

இந்த 4 புதிய 500 சிசி பைக் மாடல்களையும் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், வரவேற்பை பொறுத்து இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கும் திட்டமும் ஹோண்டாவிடம் உள்ளது.


Click it and Unblock the Notifications








