இந்த மாநிலத்தில் மட்டும் இத்தனை லட்சம் டூவீலர்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளதா? பெரிய சாதனைதான்...
தெலங்கானா மாநிலத்தில் இரு சக்கர வாகன விற்பனையில் ஹோண்டா நிறுவனம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தெலங்கானா மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 25 லட்சத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் நடப்பாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் 1 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாகவும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக நடப்பாண்டில் ஹோண்டா நிறுவனம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த சவால்களை எல்லாம் கடந்து தெலங்கானா மாநிலத்தில் விற்பனையில் புதிய மைல்கல்லை ஹோண்டா நிறுவனம் எட்டியுள்ளது. தற்போதைய நிலையில் தெலங்கானா மாநிலத்தின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அங்கு ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் 72 சதவீதத்திற்கும் மேற்பட்ட சந்தை பங்கை ஹோண்டா நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. தெலங்கானாவில் அதிகம் விற்பனையாகி வரும் ஸ்கூட்டராக ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா உள்ளது. தெலங்கானா மட்டுமின்றி இந்திய அளவிலும் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஆக்டிவா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா மாநிலத்தில் முதல் 10 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் 14 ஆண்டுகளை எடுத்து கொண்டது. எனினும் தெலங்கானா மாநிலத்தில் எஞ்சிய 15 லட்சம் இரு சக்கர வாகனங்களை கடந்த 6 ஆண்டுகளில் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக 25 லட்சத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் தற்போது தெலங்கானா மாநிலம் முழுவதும் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் விற்பனையை அதிகரிக்க முடியும் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய சேவையையும் சிறப்பாக அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஹோண்டா நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 உள்ளிட்ட பைக்குகளுடன், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 போட்டியிட்டு வருகிறது.

இதில், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள், தண்டர்பேர்டு பைக்கிற்கு மாற்றாக சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விற்பனை எண்ணிக்கையில் தனது இரண்டு ராயல் என்பீல்டு போட்டியாளர்களின் அளவுக்கு இல்லை என்றாலும், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 இந்திய சந்தையில் சிறப்பான துவக்கம் கண்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஹோண்டாவின் பிக்விங் பிரீமியம் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டுமே ஹோண்டா ஹைனெஸ் சிபி350 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிக்விங் டீலர்ஷிப்கள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. எனவே இந்தியாவில் பிக்விங் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சிகளிலும் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








