ஜாவா பைக் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியானது!
கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஜாவா பைக் டீலர்களில் விற்பனைப் பணிகள் மீண்டும் துவங்கப்பட உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. எனினும், வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளதால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரிகட்டும் வகையில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி உள்ளன.

இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, வாகன நிறுவனங்கள் வர்த்தகத்தை மீண்டும் துவங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள டீலர்களில் விற்பனைப் பணிகளை மீண்டும் துவங்க இருக்கிறது ஜாவா பைக் நிறுவனம்.

அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் பச்சை மண்டலங்களில் உள்ள டீலர்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக இடைவெளி, கிருமி நாசினி தெளிப்பு, பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் கட்டாயம் உள்ளிட்ட வழிகாட்டு முறைகளை பின்பற்றி டீலர்கள் செயல்படும் என்று ஜாவா தெரிவித்துள்ளது.

மிகவும் பாதுகாப்பான சூழலில் விற்பனைப் பணிகள் நடைபெறும். அத்துடன், டெலிவிரிப் பணிகளை சீரமைத்து மீண்டும் வரிசை கிரமப்படி, வாடிக்கையாளர்களுக்கு பைக் வழங்கப்படும்.

டீலர்களில் இருக்கும் டெஸ்ட் டிரைவ் வாகனங்கள் மற்றும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும் வாகனங்கள் கிருமி நாசினி மூலமாக அவ்வப்போது சுத்தம் செய்யப்படும். டீலர்களில் குறிப்பிட்ட இடைவெளியில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்டவை நடைபெறும்.

பணியாளர்கள் மற்றும் டீலர்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பின்னரே ஷோரூமிற்குள் அனுமதிக்கப்படுவர். மேலும், முன்கூட்டியே அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் டீலர்களுக்கு வந்து பைக் வாங்கும் நடைமுறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜாவா தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலமாக ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை மற்றும் வாடிக்கையாளர்களின் சந்தேகங்கள், அவர்களுக்கு தேவைப்படும் விளக்கங்களை வாட்ஸ் அப் கால் அல்லது இமெயில் மூலமாக வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், வாடிக்கையாளர் வீட்டிலேயே டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான வாய்ப்பு மற்றும் டெலிவிரி கொடுக்கும் பணிகளை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக ஜாவா தெரிவித்துள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு பெரும் வசதியாக அமையும்.

ஜாவா பைக்குகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பல மாதங்கள் காத்திருந்து டெலிவிரி பெறும் நிலை இருந்தது. அந்த நிலை சற்றே சீரடைந்த நிலையில், தற்போது கொரோனாவால் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் மூலமாக டெலிவிரி பெறும் காலத்தை தெரிந்து கொள்வதற்கான வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஜாவா பைக் டெலிவிரி நடைமுறைகள் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








