ஜாவா பைக் ஆலையில் முக கவசங்கள் உற்பத்தி துவங்கியது!
கொரோனா எதிரிப்பு போரில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான முக கவசங்களை உற்பத்தி செய்யும் பணிகளை ஜாவா நிறுவனம் துவங்கி இருக்கிறது.

கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மிக எளிதாக பரவும் அபாயம் இருப்பதால், பல்வேறு சவால்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

மேலும், கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டும் முடிவுடன் கொரோனா போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர் மருத்துவப் பணியாளர்கள். இந்த சூழலில், மருத்துவப் பணியாளர்களை காப்பதற்கான விசேஷ முக கவசம், உடை, சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் பணிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த சவாலானப் பணியில் அரசுத் துறையுடன் பல்வேறு தனியார் நிறுவனங்களும், தொழிற்சாலைகள் நிர்வாகங்களும் இணைந்து கொண்டுள்ளன. குறிப்பாக, வாகன நிறுவனங்கள் இதில் அதிக ஈடுபாட்டுடன் இறங்கி உள்ளன.

அந்த வரிசையில், ஜாவா பைக் நிறுவனமும் தனது பங்களிப்பை வழங்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பீதம்பூரில் உள்ள தனது பைக் ஆலையில் முக கவசங்களை உற்பத்தி செய்யும் பணியை துவங்கி இருக்கிறது.

அரசு துறை மூலமாக இந்த முக கவசங்கள் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோன்று, மற்றொரு நல்ல காரியத்தையும் ஜாவா பீதம்பூர் ஆலை செய்து வருகிறது.

அதாவது, அந்த ஆலையில் உள்ள கேண்டின் சமையல் அறை மூலமாக 1,000 பாக்கெட்டுகள் உணவு தயாரிக்கப்பட்டு தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டி உள்ளார். ஜாவா பைக்குகள் உற்பத்தியாகும் பீதம்பூர் ஆலை பணியாளர்களின் அர்ப்பணிப்பும் மகத்தானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மஹிந்திரா நிறுவனம் தனது வாகன ஆலைகளில் வென்டிலேட்டர் உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், மருத்துவ உபகரணங்கள், நிவாரணப் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








