ஜாவா பைக் வாங்க ரொம்ப ஆசையா காத்திருக்கீங்களா? அப்போ இந்த விஷயம் தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க...
வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஜாவா பைக்குகளின் விலை அதிரடியாக உயரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் கிளாசிக் லெஜண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து, ஜாவா, ஜாவா 42 மற்றும் பெராக் ஆகிய 3 மோட்டார்சைக்கிள்களின் விலைகளையும் அதிரடியாக உயர்த்தவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் இந்த மூன்று பைக்குகளை மட்டும்தான் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய 2 பைக்குகளும், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஜாவா பெராக் கடந்த 2019ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு பைக்குகளிலும், 292 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் டிஓஹெச்சி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஜாவா பெராக் பைக்கில், 334 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று மோட்டார்சைக்கிள்களின் இன்ஜின்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானவை.

ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வந்தபோது வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதன்பின் பைக்குகளை டெலிவரி செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டன. காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருந்த காரணத்தால், வாடிக்கையாளர்கள் பலர் முன்பதிவுகளை ரத்து செய்து விட்டு ராயல் என்பீல்டு பைக்குகளை தேர்வு செய்ய தொடங்கினர்.

ஆரம்பத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு ஜாவா கடும் நெருக்கடியை கொடுக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம்தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. இந்த சூழலில்தான் ஜாவா மோட்டார்சைக்கிள்களின் விலை புத்தாண்டு முதல் உயர்த்தப்படவுள்ளது.

எனினும் ஜாவா பைக்குகளின் விலை எவ்வளவு ரூபாய் உயரவுள்ளது? என்பது இன்னும் தெரியவரவில்லை. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி வெளியிட்டுள்ளது. ஜாவா மட்டுமல்லாது உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் தனது தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விலை 1,500 ரூபாய் வரை உயரவுள்ளது. இரு சக்கர வாகன நிறுவனங்களுடன் கார் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தவுள்ளன. இதில், மாருதி சுஸுகி, ஃபோர்டு, ஹூண்டாய், கியா, எம்ஜி மோட்டார், ரெனால்ட், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கியமானவை.

இந்த அனைத்து நிறுவனங்களின் வாகனங்களின் விலைகளும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அதிரடியாக உயர்த்தப்படவுள்ளன. உற்பத்தி செலவு அதிகரித்து வருவதன் காரணமாகவே விலைகளை உயர்த்தவுள்ளதாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








