இந்தியாவிலிருந்து பைக் ஏற்றுமதியை துவங்குகிறது ஜாவா நிறுவனம்!
இந்தியாவிலிருந்து பைக் ஏற்றுமதியை துவங்குவதற்கு ஜாவா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஜாவா பைக் நிறுவனம் உலகின் மிகவும் பழமையான பைக் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஜாவா பைக்குகளுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், இரு தசாப்தங்களுக்கு பின்னர் ஜாவா பைக்குகள் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகின.

ஜாவா பைக்குகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் உரிமையை மஹிந்திரா நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் பெற்றது. கடந்த 2018ம் ஆண்டு ஜாவா பிராண்டில் ஜாவா 300 மற்றும் ஜாவா 42 பைக்குகள் விற்பனைக்கு களமிறக்கப்பட்டன.

இந்த இரண்டு பைக் மாடல்களுமே வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. முன்பதிவுக்கு இணையாக உற்பத்தி திறன் இல்லாத நிலையில், டெலிவிரி பெறுவதில் கடும் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில், மூன்றாவது மாடலாக பெராக் மோட்டார்சைக்கிளும் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஜாவா பைக் மாடல்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான வரவேற்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால், காத்திருப்பு காலம் பல மாதங்கள் நீள்கின்றன. சில வாடிக்கையாளர்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி புலம்பி தீர்ப்பது குறித்த பதிவுகளும் வைரலாகின்றன.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக, உற்பத்திப் பணிகள் முடங்கி இருப்பதால், முன்பதிவு செய்த ஜாவா வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி பெறுவதில் மேலும் கால தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அண்மையில்தான் ஜாவா 300 மற்றும் 42 பைக் மாடல்களில் பிஎஸ்6 எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. க்ராஸ்போர்ட் தொழில்நுட்பத்தின் மூலமாக தனது இரட்டை சைலென்சர் தனித்துவத்தை இந்த பைக் மாடல்கள் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

இந்த இரண்டு பைக் மாடல்களிலும் 293சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஜாவா நிறுவனம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிலிருந்து ஜாவா 300 பைக் மாடலை ஏற்றுமதி செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, வர்த்தகத்தை மிகவும் ஸ்திரமாக மாற்றும் வாய்ப்பை பெற முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

இதனிடையே, இந்தியாவில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தாமதம் இல்லாமல் பைக்குகளை டெலிவிரி கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வாடிக்கையாளர் மத்தியில் இருந்து எழுந்துள்ளது. டெலிவிரிப் பணிகள் இந்தியாவில் சீரடைந்த பின்னர் ஏற்றுமதியை துவங்கினால் சிறப்பாக இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications








