ஊரடங்கால் கவலை வேண்டாம்... வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கேடிஎம்!
ஊரடங்கு பிரச்னையால் கவலையில் ஆழ்ந்திருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியை கேடிஎம் நிறுவனம் வழங்கி இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், வர்த்தக ஸ்பானங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில், மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை பெறுவதற்கு அதிக பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

இந்த சூழலில், கார், பைக் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த காலத்தில் காலாவதியாகும் சர்வீஸ் மற்றும் வாரண்டி திட்டங்கள் குறித்த காலக்கெடு நீட்டிப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், கேடிஎம் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் காலாவதியாகும் இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி திட்டங்களுக்கான காலக்கெடுவை வரும் ஜூன் 30ந் தேதி வரை நீட்டித்துள்ளது கேடிஎம்.

இதனால், பைக்குகளை சர்வீஸ் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கும் கவலையை தீர்த்துக் கொள்ளவும், போதுமான அவகாசத்தையும் இந்த கால நீட்டிப்பு வழங்கும்.

மேலும், பைக்குகளின் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கித் தருவதற்கான உதிரிபாகங்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும் இந்த கால நீட்டிப்பு போதுமானதாக இருக்கும் என்று கேடிஎம் தெரிவித்துள்ளது.

தனது ஆலைகளில் உற்பத்திப் பணிகள் முடக்கப்பட்டு இருந்தாலும், ஊரடங்கு தளர்ந்தால், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி பைக்குகளை டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறி இருக்கிறது.

ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால், டெலிவிரி பணிகள் எந்த தொய்வும் இல்லாமல் நடப்பதற்கான திட்டங்களை வைத்திருப்பதாகவும், ஆனால், 2020ம் ஆண்டுக்கான வர்த்தகப் பணிகள் இலக்கு வைக்கப்பட்டது போல நடப்பதில்தான் சிக்கல்கள் உள்ளதாக கேடிஎம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இத்தாலியிலும், ஜெர்மனியிலும் நடைபெற இருக்கும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சிகளில் இந்த ஆண்டு பங்கேற்க போவதில்லை என்று கேடிஎம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிலைமயால் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








