மிசோரமில் சீன பைக்கை பயன்படுத்த தடை! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய காரணம் இருக்கா? தலையே சுத்துது!
சீன நாட்டின் குறிப்பிட்ட நிறுவனத்தின் பைக்கைப் பயன்படுத்த மிசோரம் அரசு தடை விதித்துள்ளது. இதற்கான ஷாக்களிக்கும் காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் அண்மைக் காலங்களாக சீன தயாரிப்புகளுக்கு எதிராக அறிவிக்கப்படாத பனி போர் நிலவி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு நாட்டு எல்லைப் பகுதியான லடாக், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறியதைத் தொடர்ந்து இந்த நிலை நீடித்து வருகின்றது. "பாய்காட் சீனா" எனும் சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் மன நிலை மக்கள் மத்தியில் எழும்பியுள்ளது.

மக்களுடன் சேர்ந்து ஒரு சில வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. சீன நிறுவனங்களுடன் கூட்டணியை முறிக்கும் செயலில் அவை ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, டாடா நிறுவனம் சீனாவின் செரி நிறுவனத்துடனான இணைவை முடிவுக்குக் கொண்டுவந்தது.

இதேபோன்று மஹாராஷ்டிரா அரசும்கூட தன் மாநிலத்தில் சீன நாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளவிருந்த முதலீட்டிற்கு முற்று புள்ளி வைத்தது. இம்மாதிரியான சூழ்நிலையில் மிசோரம் மாநில அரசு சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் குறிப்பிட்ட நிறுவனத்தின் பைக்குகளை மட்டும் பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

கென்போ எனும் சீன நாட்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கே மிசோரம் அரசு தடை விதித்துள்ளது. இந்நிறுவனத்தின் பெரும்பாலான வாகனங்கள் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்ட பின்னரே இந்த அதிரடி நடவடிக்கையை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக, போதைப் பொருட்கள் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்களில் கென்போ நிறுவனத்தின் பைக்குகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டை மையப்படுத்தியே மிசோரம் தடை நடவடிக்கையை எடுத்துள்ளது. கென்போ நிறுவன பைக்கின் வடிவமைப்பு மற்றும் பிற அனைத்தும் சமூக விரோத செயல்களை அரங்கேற்றுவதற்கு ஏதுவாக இருப்பதே இந்த நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான சமூக விரோதிகளின் கைகளில் கென்போ நிறுவனத்தின் பைக்குகளே அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. இவர்கள் அண்டை நாடான பர்மாவின் மியான்மர் பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள் உள்ளிட்டவற்றை மிசோரத்திற்கு கொண்டு வந்து புழக்கத்தில் ஈடுபடுத்துகின்றனர்.

இதுபோன்ற செயல்களின் காரணமாகவே கென்போ நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் அறிவிப்பை புதன்கிழமை (நேற்று) அன்று மிசோ அரசு வெளியிட்டது. அதேசமயம், கென்போ நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் நாட்டிற்கு வெளியே தயாரிக்கப்படுகின்றன. அவை, மிசோரத்தில் பதிவு செய்யப்படாதவை. எனவே இதுவும் மிசோரம் அரசின் தடை நடவடிக்கைக்கு காரணமாக உள்ளது.

கென்போ மோட்டார்சைக்கிள் குறிப்பாக மிசோரம் மாநிலத்தின் சம்பாய், ஹன்தியால், லாங்ட்லாய், சியாஹா மற்றும் செர்ச்சிப் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவில் பயன்பாட்டில் இருப்பதாக மிசோரம் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மிசோரம் பல்வேறு அண்டை நாடுகளுடன் எல்லைப் பகுதியை பகிரும் மாநிலமாக உள்ளது. பங்களாதேஷ் மற்றும் மியான்மர் உள்ளிட்டவற்றுடன் அது எல்லைப் பகுதியைப் பகிர்ந்து வருகின்றது.

இந்த எல்லைப் பகுதியில் பெரியளவில் பாதுகாப்பு வளையம் போடவில்லை என்றாலும் கோவிட்19 வைரஸ் காரணம் காட்டி அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்கின்றன. இருப்பினும், மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள், சிகரெட்டுகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்ற ஆயுதங்கள்கூட தங்குதடையின்றி உள்ளே கொண்டுவரப்படுகின்றன. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகவே கென்போ மோட்டார்சைக்கிளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள் (யாபா டேப்லெட் அல்லது பார்ட்டி டேப்லெட் என்றும் அழைக்கப்படுகின்றன) மெத்தாம்பேட்டமைன் மற்றும் காஃபின் கலவையை அதிகளவில் கொண்டிருக்கின்றன. அதாவது, வழிகாட்டப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகளவில் மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவை இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிற அண்டை நாடுகளில் தவறாக (போதைப் பொருளாக) பயன்படுத்தப்படுகின்றன.

Image Courtesy: Kenbo motorcycle
இதுகுறித்து, பிஎஸ்எஃப், அசாம் ரைபிள்ஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், "யாபா மாத்திரைகள் மற்றும் பிற மருந்துகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு அண்டை நாடான மியான்மரில் இருந்து கடத்தப்பட்டு பின்னர் பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன" என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.


Click it and Unblock the Notifications








