சைக்கிள்ல இப்படி ஒரு வசதியா..? என்னனு தெரிஞ்சா பைக்கிற்கு பதிலா இதையே வாங்கிடுவீங்க... மோட்டோவோல்ட் இ-சைக்கிள்
மோட்டோவோல்ட் நிறுவனம் பிரத்யேக வசதிகளுடன் ஸ்மார்ட் இ-சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான மோட்டோவோல்ட் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் முதல் ஸ்மார்ட் இ-சைக்கிள்களை இன்று அறிமுகப்படுத்தியது. மோட்டோவோல்ட் எனும் பிராண்ட் பெயரில் இவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இதனை டென்னிஸ் உலகின் அழியாத ஜாம்பவானாக பார்க்கப்படும் லியாண்டர் பேஸ் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வின்போது மோட்டோவோல்ட் நிறுவனத்தின் இயக்குனர் துஷார் சவுத்ரி மற்றும் இணை இயக்குனர் ஹிமாத்ரி ஆகியோரும் கலந்துக் கொண்டனர். இருவிதமான பயன்பாட்டிலும் பங்குகொள்கின்ற வகையில் புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, வாடகை மற்றும் டெலிவரி போன்ற வணிகம் சார்ந்தும் இயங்குகின்ற வகையிலும், தனி நபர் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்ற வகையிலும் அவை காட்சியளிக்கின்றன.

ஆகையால், இந்த வாகனம் வெறும் வாடகை நிறுவனங்களின் கைகளுக்கு மட்டுமே ஒப்படைக்கப்படாது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் இந்த வாகனங்கள் வரும். தற்போது இந்த நிறுவனத்தின்கீழ் 28 ஸ்டோர்கள் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றின்கீழ் புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள்கள் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

இதுமட்டுமின்றி, ஆஃப்லைன் விற்பனைக்காக மெட்ரோ கேஷ் மற்றும் கேரி இந்தியா ஆகியவற்றுடன் மோட்டோவோல்ட் தற்போது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிறுவனங்கள் விளம்பரம் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மேற்கொள்ளும். குறிப்பாக, மோட்டோவோல்ட் நிறுவனத்தின் செயல்பாடு குறைவாக இருக்கும் இடங்களில் இதற்கான பணியை அவை மேற்கொள்ள இருக்கின்றன.

மோட்டோவோல்ட் முதல் கட்டமாக ரூ. 100 கோடி முதலீட்டில் தனது பணியைத் தொடங்கியிருக்கின்றது. உலக தரம் வாய்ந்த வாகனங்களைத் தயாரிக்கும் விதமாக இதன் உற்பத்தி ஆலையை கொல்கத்தாவிலும், பொறியியல் மற்றும் டிசைன் செய்யும் பணிகளை பெங்களூருவிலும் அது மேற்கொண்டு வருகின்றது.

மோட்டோவோல்ட் நான்கு விதமான இ-சைக்கிள்களை இன்று அறிமுகப்படுத்தியது. இதில், ஹம் எனும் பெயரில் அறிமுகமாகியிருக்கும் இ-சைக்கிள் பன்முக பயன்பாட்டு திறன் கொண்டது. வணிகம் மற்றும் வாடகை சேவை நிறுவனங்கள் பயன்படுத்துகின்ற கிவோ ஸ்டாண்டர்டு மற்றும் கிவோ ஈசி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஐஸ், பார்க்க சிறியதாக இருக்கும் இந்த ஸ்மார்ட் இ-சைக்கிளை மடிக்கணினியைப் போல் மடித்து வைத்துக் கொள்ள முடியும். அதாவது, இதன் இருக்கை மற்றும் ஹேண்டில் பார்களை மடித்து சிறிய அறைக்குள்கூட வைத்துக் கொள்ள முடியும். தேவைப்பட்டால் காரின் டிக்கிக்குள் இதனை வைத்துக்கொண்டு பயணிக்க முடியும். ஆமாங்க, இந்த சிறப்பு வசதியுடனேயே மோட்டோவோல்ட் ஐஸ் வேரியண்ட் இ-சைக்கிளை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இவையனைத்திலும் மின்சார திறனுக்காக லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஐஓடி, பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், செல்போனுடன் இணைத்துக் கொள்ளக்கூடிய சிறப்பு இணைப்பு வசதியும் இதில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்காக பிரத்யேக ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவேதான், இதனை இந்தியாவின் ஸ்மார்ட் இ-சைக்கிள் என கூறப்படுகின்றது.

இந்த புதிய ஸ்மார்ட் இ-சைக்கிள் விலை மற்றும் ரேஞ்ஜ் விபரம் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் அண்மைக் காலங்களாக சைக்கிளுக்கான மவுசு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மாவோல்ட் தனது ஸ்மார்ட் இ-சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








