"விலை உயர்வா? வாய்ப்பே இல்ல!" யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல பைக் நிறுவனம்!
பிஎஸ்-4 வாகனத்தின் விலையில் பிஎஸ்-6 தர பைக்குகளை விற்பனைச் செய்ய இருப்பதாக பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக பார்க்கலாம்.

கடந்த 1ம் தேதி முதல் புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6 அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த புதிய உமிழ்வு விதி நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயம் அதன் தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது.

அவ்வாறு, புதிய தரத்திற்கு உயர்த்தப்பட்ட வாகனங்கள் அனைத்தும் சற்றே விலையுர்ந்த மாடல்களாக விற்பனைக்கு அறிமுகமாகி வருகின்றன.
ஆனால், இந்த நிலையை உடைத்தெறியும் வகையில் பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம், புதிய உமிழ்வு தரத்திற்கு இணக்கமாக தயாரித்த அதன் பைக்கின் விலையை இப்போதைக்கு உயர்த்தப்போவதில்லை என தெரிவித்துள்ளது. ஆனால், இது நீண்ட நாட்களுக்கு இல்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது. ஏனென்றால், இது தற்காலிக முடிவு மட்டுமே. வருகின்ற ஜூலை மாதத்திற்கு பின்னர் புதிய தர பைக்குகளின் விலையை உயர்த்த இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், அந்நிறுவனம் தற்போது வரை அதன் போனவில்லாவின் வரிசையில் இருக்கும் ஸ்ட்ரீட் ட்வின், டி100, டி120 மற்றும் ஸ்பீட் மாஸ்டர் ஆகிய மாடல்களை மட்டுமே பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமாக மாற்றியமைத்துள்ளது. எனவே இந்த பைக்குகள் மட்டுமே பிஎஸ்4 விலையில் கிடைக்கும்.

புதிய பிஎஸ்6 தரத்திலான டிரையம்ப் போனவில்லே பைக் எந்தவொரு விலையுயர்வையும் பெறாதது அதன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே என்பதால் சற்றே துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பிஎஸ்-4 வாகனத்தின் விலையில் பிஎஸ்-6 தர வாகனம் வருகின்ற ஜூலை மாதம் வரை கிடைக்கும் என்பதை அவர்கள் வரவேற்றிருக்கின்றனர்.

அதேசமயம், வாகன அறிமுகத்தை ஒத்தி வைத்தை கேள்விப்பட்ட நமக்கு, விலையுயர்வை தள்ளி வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு நமது அண்ணன் கொரோனா வைரஸ்தான் என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் வாகன உற்பத்தியையும், விற்பனையையும் கடுமையாக பாதித்து வருகின்றது.

எனவே, இம்மாதிரியான சூழ்நிலையில் விலையுயர்வு பைக்கின் விற்பனையைக் கடுமையாக பாதிக்கும் என எண்ணிய டிரையம்ப் நிறுவனம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இருப்பினும், ஒரு சில நிறுவனங்கள் புதிய உமிழ்வு தரம் கொண்ட வாகனங்களின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றன.
இந்தநிலையில் டிரையம்ப் நிறுவனத்தின் அறிவிப்பு அதன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த வாகன உற்பத்தி நிறுவனத்திற்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

டிரையம்ப் நிறுவனம் டைகர் 900 ஜிடி மற்றும் டைகர் 900 ரேலி உள்ளிட்ட மாடல்களையும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இவையனைத்தும் யூரோ 5 தரத்திலானவை ஆகும். அதாவது, பிஎஸ்6 தரத்திற்கு இணையானது என கூறப்படுகின்றது. இந்த மாடல்கள் போனவில்லேவைப் போன்று அல்லாமல் விலையுயர்வுடன்தான் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல. இருப்பினும், இன்னும் ஒரு சில மாதங்களில் அதுகுறித்த தகவல் வெளியிடப்படும்.
கொரோனா வைரசால் விற்பனைக் குறையக் கூடாது என விலையுயர்வைக் கைவிட்டிருக்கும் டிரையம்ப் நிறுவனம், வாரண்டி மற்றும் சர்வீஸ் நாட்களை கூடுதலாக்கி அறிவித்துள்ளது.

தற்போது, விலையுயர்வு இல்லாமல் விற்பனைக்குக் கிடைக்கும் போனவில்லே பைக்கின் ஆரம்பநிலை மாடல் 8.87 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேசமயம், இதன் அதிகபட்ச விலை ரூ. 11.6 லட்சமாக உள்ளது. இந்த அதிகபட்ச விலைக்கு ஏற்ப பைக்கில் பல்வேறு பிரிமியம் தரத்திலான வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








