தில் பட பாணியில் பாதுகாப்பு கவசம்! ரேபிடோவின் சூப்பர் மாற்று சிந்தனை! கொரோனா அச்சமின்றி பயணிக்கலாம்!
சியான் விக்ரம் நடித்த தில் திரைப்பட பாணியில் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிராக பாதுகாப்பு கவசத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

நடிகர் சியான் விக்ரம், நகைச்சுவை நடிகர்கள் விவேக், வையாபுரி மற்றும் மயில்சாமி ஆகியோர்களின் கலவையில் 2001ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே 'தில்'. இப்படத்தில் கதாநாயகன் விக்ரமுக்கு ஜோடியாக லைலா நடித்திருப்பார். இவர்கள் இணைந்து நடித்த காட்சிகளிலேயே மிகவும் பிரபலமான காட்சியாக, இருவரும் முதல் முறை இருசக்கர வாகனத்தில் சேர்ந்து செல்லும் காட்சி இருக்கின்றது.

பெரியளவில் அறிமுகமில்லாத விக்ரமுடன் அவசரமாக இருசக்கர வாகனத்தில் செல்லும் சூழல் லைலாவுக்கு ஏற்படும். ஆனால், அது ஓர் டூலர் என்பதால் லைலா லேசாக தயக்கம் காட்டுவார். அதற்கு பல்வேறு காரணங்களையும் அவர் கூறுவார். அந்த காட்சி தற்போதும் இணையத்தில் டிரெண்டாகக் கூடிய ஓர் காட்சியாகும். விக்ரம் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக லைலா சாலையோரத்தில் இருக்கும் பலகை ஒன்றைப் பயன்படுத்துவார்.

இது இருவருக்கு இடையே கவசம்போல் செயல்படும் என்ற காரணத்திற்காக அதை அவர் பயன்படுத்துவார். இந்நிலையில், இதே பாணியைதான் பிரபல பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ கையாள இருக்கின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரசிடம் இருந்து தனது வாடிக்கையாளர்களைக் காக்கும் விதமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசைக் காரணம் காட்டி டாக்சித்துறையில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்யப்படும் மாற்றங்களில் முதல் இடத்தைப் பாதுகாப்பு கவசங்கள் பிடித்திருக்கின்றன. அதாவது, சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் விதமாக கண்ணாடி கவசங்கள் அல்லது பாலிதீன் தடுப்பு உள்ளிட்டவை கார் மற்றும் ஆட்டோக்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், பைக் டாக்சி துறையையும் பாதுகாப்பானதாக மாற்றும் விதமாக ஓட்டுநர் மற்றும் பயணிக்கும் இடையே இடைவெளியை உறுதிச் செய்யும் விதமாக பலகை போன்ற பிளாஸ்டிக் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுநர்-பயணி இடையே தடுப்பாக செய்வதுடன், கொரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தையும் போக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

இதன் எடை மிகவும் குறைவானதாக இருப்பதால் ஓட்டுநர் இதை அணிந்திருக்கும்போது அசௌகரியமாக உணர மாட்டார் என கூறப்படுகின்றது. இதன் ஒட்டுமொத்த எடையே 400கிராம் மட்டுமே ஆகும். இந்த புதிய பாதுகாப்பு கவசத்தை தனது பார்ட்னர்களுக்கு இலவசமாக வழங்க ரேபிடோ திட்டமிட்டுள்ளது. தற்போது, கொரோனா வைரசால் ஒட்டுமொத்த வாகனத்துறையே மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

இதில், வாடகை வாகன ஓட்டுநர்களும் அடங்குவர். இதனைக் கருத்தில் கொண்டே புது பாதுகாப்பு கவசத்தை இலவசமாக வழங்க இருப்பதாக ரேபிடோ அறிவித்துள்ளது. ரேபிடோவின் கால் டாக்சி நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், தற்போது புதிய பாதுகாப்பு கவசத்துடன் ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஜெய்பூர் ஆகிய பகுதிகளில் மட்டும் சோதனையோட்டம் முறையில் டாக்சி சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த பரிசோதனையோட்டத்தில் தடுப்பு போன்று பயன்படுத்தப்படும் கவசத்தால் ஓட்டுநர் மற்றும் பயணி ஆகிய இருவரும் என்ன மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கின்றனர் என்பதை தரவாகச் சேகரித்து வருகின்றது. இந்த தரவைத் தொடர்ந்து தற்போதைய பாதுகாப்பு கவசத்தின் அளவை குறைப்பது மற்றும் நீட்டிப்பது போன்ற நடவடிக்கைகளை பிற்காலத்தில் எடுக்க இருப்பதாக ரேபிடோ தெரிவித்துள்ளது.

இத்துடன், தற்போது வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட ஹெல்மெட்டைப் பயணத்தின்போது பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றது. அதேசமயம், வாடிக்கையாளர்களுக்காக பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டை சுத்திகரிக்கவும் அது தவறவில்லை. அதேசமயம், வைரசிடம் இருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் விதமாக மாஸ்க், சானிட்டைசர் மற்றும் கையுறை உள்ளிட்டவைற்றைப் பயன்படுத்தும்படி அது அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் போன்ற நாட்டின் ஒரு சில மாநிலங்களில் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், முந்தைய காலங்களில் முறையான அனுமதியைப் பெறாத பைக் டாக்சிகள் பலவற்றை சென்னைப் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். பைக் டாக்சிகள், வாடகை கார் மற்றும் ஆட்டோக்களின் புக்கிங்கை அதிகம் பாதித்து வந்ததால், இவர்கள் தரப்பில் கிளம்பிய எதிர்ப்பு ஏகேபோகம். எனவே, தற்போது வரை தமிழகத்தில் பைக் டாக்சி தலையோங்க முடியாமல் தவித்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








