ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு!
வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளையும், இத்தருணத்தில் மோட்டார்சைக்கிள்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு முறைகளையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பிரச்னை காரணமாக தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. முதல்கட்டமாக 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக, வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய சூழல் உள்ளது. இதனை மனதில் வைத்து மோட்டார்சைக்கிள்களை இந்த தருணத்தில் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற வழிகாட்டு முறைகளை அனைத்து நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு மோட்டார்சைக்கிள்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்த சில முக்கிய வழிகாட்டு முறைகளை வழங்கி இருக்கிறது.

அதன்படி, மோட்டார்சைக்கிளை ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கும் சூழல் ஏற்பட்டால், சில தினங்களுக்கு ஒருமுறை மோட்டார்சைக்கிளை 2.5 மீட்டர் தூரம் வரை நகர்த்த வேண்டும்.

அப்போது முன்புற மற்றும் பின்புற பிரேக்குகளை மென்மையாக பிடித்து நிறுத்துவதும் அவசியம் என்று தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, துருப்பிடிக்கும் வாய்ப்பு தவிர்க்க முடியும்.

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ளவர்கள் வாய்ப்பு இருக்கும்பட்சத்தில், அதன் வளாகத்திலேயே சிறிது தூரம் நகர்த்துவதும், எஞ்சினை 10 நிமிடங்கள் ஓட விட்டு அணைப்பதும் அவசியம் என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலமாக எஞ்சின் பிரச்னைகள் தவிர்க்கப்படுவதுடன், பேட்டரியும் சார்ஜ் ஆவதற்கு போதுமான அவகாசம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ளட்ச், பிரேக், ஆக்சிலரேட்டர் உள்ளிட்டவற்றை மென்மையாக இயக்குவதும் கேபிள்கள் சீராக இயங்குவதற்கான வாய்ப்பை தரும்.

மோட்டார்சைக்கிள் எஞ்சினிலிருந்து சக்கரத்திற்கு சக்தியை கடத்தும் சங்கிலியை சுத்தம் செய்து ஆயில் போட்டு வைப்பதும் நல்லதொரு பராமரிப்பு முறையாகவும் ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. வண்டியை கடினமான தரைப்பரப்பில் சென்டர் ஸ்டான்டில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த மாதம் 22ந் தேதி முதல் நாளை (ஏப்ரல் 14) வரையிலான காலக்கட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி காலாவதியான வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்கள் வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

மிட்சைஸ் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு முன்னிலை வகிக்கிறது. ரூ.1.22 லட்சத்திலிருந்து ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் கிடைக்கின்றன. பாரம்பரியம் மிக்க மோட்டார்சைக்கிள்களை வாங்க விரும்புவோருக்கு முதல் சாய்ஸாக உள்ளது.


Click it and Unblock the Notifications








