சூப்பர்... எலெக்ட்ரிக் பைக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட்... எவ்வளவு செலவானது தெரியுமா?
ராயல் என்பீல்டு புல்லட் பைக், எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எதிர்கால உலகை ஆளப்போவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதற்கு ஏற்ப முன்னணி நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. அதே சமயம் வாகன மாடிஃபிகேஷனில் ஆர்வமுள்ள பலர் வழக்கமான வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றி வருகின்றனர்.

இந்த வகையில் ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet) பைக் ஒன்று மிகவும் சாமர்த்தியமான முறையில் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களைதான் நாம் இந்த செய்தியில் காணவுள்ளோம். வாருங்கள் இனி செய்திக்குள் செல்லலாம்.

கேரள மாநிலம் கொச்சியை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஹவுண்டு எலெக்ட்ரிக் (Hound Electric) என்னும் நிறுவனத்தால், இந்த மாடிஃபிகேஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல்களுக்கான பவர்டிரெயின்களை டிசைன் செய்வதிலும், மேம்படுத்துவதிலும் ஹவுண்டு எலெக்ட்ரிக் நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை போற்றும் வகையில், அதன் புல்லட் 350 பைக்கில் இந்த மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் முஸ்தபா ஆகிய இருவர் கூட்டணி, வெற்றிகரமாக இந்த மாடிஃபிகேஷனை செய்துள்ளது. ஹவுண்டு எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரியான பால் அலெக்ஸின் யோசனை அடிப்படையாக வைத்து இதனை செய்துள்ளனர்.

இதுகுறித்து எலெக்ட்ரிக் வெய்கில் வெப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாடிஃபிகேஷன் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் அல்லது அதே போன்ற இலகுரக பைக்கைதான் அவர்கள் பரிசீலனை செய்தனர். ஆனால் 10 kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 72A/60V பேட்டரி தொகுப்பை பயன்படுத்தலாம் என இந்த இருவர் கூட்டணி திட்டமிட்டது.

ஆனால் பயணிகள் மோட்டார்சைக்கிளுக்கு இந்த எலெக்ட்ரிக் மோட்டார் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதால் இதுபற்றி யோசிக்க தொடங்கினர். அத்துடன் இந்த பேட்டரி தொகுப்பை சிறிய பைக்குகளில் பயன்படுத்துவதும் சாத்தியமில்லாத ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அதிக இடவசதி இருக்கும் ஒரு பைக்கை அவர்கள் பரிசீலனை செய்ய தொடங்கினர்.

இதன் இறுதியாகவே ராயல் என்பீல்டு புல்லட் 350 தேர்வு செய்யப்பட்டது. இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள பேட்டரியின் எடை 32 கிலோ. அதே சமயம் எலெக்ட்ரிக் மோட்டாரின் எடை 10 கிலோ. இன்ஜின் இருந்த இடத்தில் பேட்டரியை பொருத்தியுள்ளனர். இந்த பைக்கின் எடை 166 கிலோ. ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் சுமார் 80 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும்.

இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்கள். ஆனால் இது சாலையின் நிலை மற்றும் பைக்கை ஓட்டக்கூடிய நபரின் எடை ஆகியவற்றை பொறுத்தது. எனினும் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என்பது தெரியவில்லை. பணிகளை முழுமையாக முடிப்பதற்கு 10 மாதங்கள் ஆகியுள்ளது. சுமார் 35,000 ரூபாயை செலவிட்டுள்ளனர்.

ஆனால் மோட்டார், பேட்டரி மற்றும் ஒரு சில உதிரிபாகங்களின் விலை இந்த செலவில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் அவை ஏற்கனவே அவர்களிடம் இருந்தன. ராயல் என்பீல்டு நிறுவனமும் எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த பைக் அறிமுகமாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications








