40 சதவீத சலுகையை அடுத்து சிறப்பு ஆஃபரை அறிவித்த ராயல் என்ஃபீல்டு... வாடிக்கையாளர்களை கவர அதிரடி!
வாடிக்கையாளர்களைக் கவர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய வாகனத்துறையின் வர்த்தகம் அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது. இதனை சீர்படுத்துவதற்காக பல்வேறு அதிரடி சலுகைகளை அவை அறிவித்து வருகின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் கொரோனா காலத்தில் விட்ட அனைத்தையும் இப்போதே பிடித்து விட வேண்டும் என்பது போன்ற முயற்சியில் அவை ஈடுபட்டு வருகின்றன.

இதன்படி, தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சிறப்பு சலுகைத் திட்டங்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில், அண்மையில் இருசக்கர வாகனங்களை மட்டுமின்றி அதன் ரைடிங் கியர்கள் பக்கமும் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக அவற்றின்மீது 40 சதவீத சலுகை அறிவித்தது.

இந்நிலையில், தற்போது இருசக்கர வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக கூடுதல் வாரண்டி காலத்தை வழங்க திட்டமிட்டிருக்கின்றது.
இந்த சிறப்பு வாரண்டி திட்டத்தை பிஎஸ்6 பைக்குகளுக்கு மட்டுமின்றி பிஎஸ்4 வாகனங்களுக்கு வழங்க இருப்பதாக அது அறிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கு 'ராயல் என்ஃபீல்டு செக்யூர்' என்ற பெயரை அந்நிறுவனம் வைத்திருக்கின்றது. ஆனால், இந்த சலுகைக் குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் வெளியிடப்படவில்லை. இந்த சலுகை தற்போது சத்தமே இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2 வருடங்கள் அல்லது 30 ஆயிரம் கிமீ என்ற வாரண்டியை புதிய வாகனங்களுக்கு வாடிக்கையாக வழங்கி வருகின்றது. இதைதான் விருப்ப தேர்வாக நான்கு வருடங்கள் அல்லது 50 ஆயிரம் கிமீட்டர் வரை ஆப்ஷனாக வழங்க அந்நிறுவனம் வழங்கி திட்டமிட்டுள்ளது. எனவே, புதிய பைக்கை வாங்கிய பின்னர் விருப்பப்பட்டால் வாரண்டியை உயர்த்தி மாற்றிக் கொள்ளலாம்.

இதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூடுதல் கட்டணமாக கணிசமான குறைந்த தொகையை நிர்ணயித்துள்ளது. அவை, ரூ. 1,599 இல் தொடங்கி ரூ. 6,999 வரை உள்ளது. பைக்கின் சிசி திறனைப் பொருத்தும், கால உயர்வைப் பொருத்தும் இந்த தொகை நிர்ணயிக்கப்படும்.
அதேசமயம், இந்த கூடுதல் வாரண்டி திட்டம் பிஎஸ்4 வாகனங்களுக்கு தனிப்பட்டதாகவும், பிஎஸ் 6 வாகனங்களுக்கு தனிப்பட்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்-4 வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் கால வாரண்டியை மூன்று விதமான நிலைகளில் தேர்வு செய்து கொள்ள முடியும். 0-2 மாதங்கள், 3 முதல் 12 மாதங்கள் மற்றும் 13 முதல் 22 மாதங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டணம் ரூ. 2,150ல் தொடங்கி ரூ. 3,149 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பிஎஸ்6 வாகனங்களுக்கும் கூடுதல் வாரண்டி காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தனி சிறப்பு என்னவென்றால், புதிய பைக்கை வாங்கி ஆறு மாதங்களுக்கு உள்ளாக இருப்பவர்கள்கூட இந்த சிறப்பு திட்டத்தின் பயனைப் பெற முடியும். அதேசமயம், ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இருப்பவர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் என நினைத்தால் சற்று கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி எக்ஸ்ட்ரா நாட்கள் வாரண்டியைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கான ரூ. 1,599 இல் தொடங்கி ரூ, 6,999 வரை உள்ளது. இதுவும், காலங்கள் மற்றும் பைக்கின் சிசி திறனைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகின்றது. கூடுதல் வாரண்டிகுறித்து ரஷ்லேன் ஆங்கில தளம் வெளியிட்ட புகைப்படத்தைதான் நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டுள்ளீர்கள். இதில் உங்களுக்கு போதுமான தகவல் கிடைத்திருக்கும் என நாங்கள் நம்புகின்றோம். இதுகுறித்து கூடுதல் தகவலை அறிந்துக் கொள்ள உங்கள் அருகில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு ஷோரூமை அணுகவும்.

வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கையில் களமிறங்கி வருகின்றது. அந்தவகையில், விலைக் குறைந்த பைக், ரைடிங் கியர்களின் விலையில் சலுகை மற்றும் பெண் ரைடர்களைக் கவர்கின்ற வகையில் அவர்களுக்கான பிரத்யேக உடை உள்ளிட்டவற்றை இந்நிறுவனம் சந்தையில் களமிறக்கி வருகின்றது.


Click it and Unblock the Notifications








