கொரோனா தொற்று அச்சம் இல்லாமல் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகம்!
வாடிக்கையாளர்கள் கொரோனா தொற்று அச்சம் இல்லாமல் பைக்குகளை வாங்குவதற்கான திட்டங்களை ராயல் என்ஃபீல்டு அறிவித்துள்ளது. இந்த சிறப்பான திட்டம் குறித்த விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா தொற்று காரணமாக வாகன விற்பனை வீழ்ந்து கிடக்கிறது. இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆராய்ந்து அமல்படுத்தி வருகின்றன. எனினும், கொரோனா தொற்று வேகம் அதிகரித்து இருப்பதால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது.

இந்த இக்கட்டான தருணத்தில் வாகன விற்பனையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை கார், பைக் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்கள் எந்த அச்சமும் இன்றி தனது புதிய பைக்குகளை வாங்குவதற்கான திட்டங்களை ராயல் என்ஃபீல்டு அறிவித்துள்ளது.

இதன்படி, ராயல் என்ஃபீல்டு இணையதளத்தின் மூலமாக பைக்குகளை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அனைத்து பைக்குகளும் பட்டியலிடப்பட்டு இருப்பதுடன், அதன் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விபரங்கள், கூடுதல் ஆக்சஸெரீகள் உள்ளிட்ட விபரங்கள் வழங்கப்படுகின்றன.

தங்களுக்கு விருப்பமான ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துவிட்டால், அவர்களது வீட்டிற்கே டெஸ்ட் டிரைவ் பைக்கை கொண்டு வந்து ஓட்டி பார்க்கும் வசதியும் கொடுக்கப்படும். அதில் திருப்தி ஏற்பட்டால், அருகாமையிலுள்ள டீலர் மூலமாக ஆவணங்கள் மற்றும் பணம் செலுத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

அதன்பிறகு, குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளருக்கு வீட்டிலேயே பைக் டெலிவிரி கொடுக்கப்படும். கொரோனா தொற்று ஏற்படாத வகையில் முழுமையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றி பைக்குகள் டெலிவிரி கொடுக்கப்படும் என்று ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

அதேபோன்றே, வாடிக்கையாளர்கள் தங்களது பைக்குகளை வீட்டில் இருந்தபடியே எளிதாக சர்வீஸ் செய்யும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சர்வீஸ் ஆன் வீல்ஸ் என்ற பெயரிலான இந்த திட்டத்தின்படி, விசேஷ சர்வீஸ் வாகனம் மூலமாக வாடிக்கையாளர் வீட்டிற்கே வந்து பைக்கை சர்வீஸ் செய்து தரப்படும்.

நடமாடும் சர்வீஸ் வாகனத்தில் சாதாரண பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் இருக்கும். அதாவது, பைக்கில் ஏற்படும் சிறிய பழுதுகள் மற்றும் இதர பராமரிப்புப் பணிகளுக்கான அனைத்து வசதிகளுடன் இந்த வாகனம் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

வரும் ஜூலை மாதம் முதல் இந்த நடமாடும் சர்வீஸ் மைய சேவையை துவங்க இருப்பதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. அனைத்து டீலர்களிலும் இந்த நடமாடும் வாகனம் மூலமாக சர்வீஸ் செய்து தரும் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோன்று, குறிப்பிட்ட நகரங்களில் வீட்டிலிருந்து வாகனத்தை எடுத்துச் சென்று சர்வீஸ் செய்து திரும்ப கொண்டு வந்து தரும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள 90 சதவீத ஷோரூம்களில் வர்த்தகப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுவிட்டதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட ஷோரூம்களில் மட்டுமே சேவைகள் முடங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் சிறப்பான சேவையை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








