230 கிமீ ரேஞ்ச், 103 கிமீ வேகம்... புரட்சிகர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... அப்புறம் என்னங்க வேணும்!
ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 230 கிமீ பயணிக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. நாட்டின் முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தவிர்த்து, ஸ்டார்ட் அப் எனப்படும் குறைவான முதலீட்டுடன் தொழில்நுட்பத்தை நம்பி இறங்கும் நிறுவனங்களும் அதிக அளவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கி வருகின்றன.

இதனால், சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கிறது.

இதுவரை வந்துள்ள பல முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சராசரியாக 80 முதல் 100 கிமீ தூரம் வரை அதிகபட்சமாக பயணிக்கும் திறனை பெற்றிருக்கின்றன. ஆனால், சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

சோதனை அடிப்படையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 230 கிமீ ரேஞ்ச் கொண்டதாக அராய் சான்று அளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இது நிச்சயம் நடைமுறையில் 170 கிமீ முதல் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கும்.

இதனால், இந்த புதிய ஸ்கூட்டர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 4 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் சொந்த முயற்சியில் உருவாக்கி இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரின் Eco மோடில் வைத்து இயக்கி பரிசோதித்தபோது, 230 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என அராய் சான்று வழங்க உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டர் மணிக்கு 103 கிமீ வேகத்தை எட்டும் வல்லமையையும் பெற்றிருக்கும் என்பது அடுத்து முக்கிய விஷயமாக இருக்கிறது.

இந்த புரட்சிகர எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை வீட்டில் கொடுக்கப்படும் சாதாரண சார்ஜர் மூலமாக 40 நிமிடங்களிலும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 17 நிமிடங்களிலும் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியுமாம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 0 - 50 கிமீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும்.

இந்த ஸ்கூட்டரின் பேட்டரி ஐபி67 தரச்சான்றுக்கு இணையானது. தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 80 முதல் 90 சதவீதம் உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே பெறப்படும் என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது.

சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தை சுகாஸ் மற்றும் ஷ்ரெத் ஆகியோர் இணைந்து உருவாக்கி இருக்கின்றனர். மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மார்க்-1 புரோட்டைடைப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. அடுத்து மார்க்-2 என்ற மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை உருவாக்கும் முயற்சிகளிலும் அதற்கான முதலீடுகளை பெறுவதிலும் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர்.

நாட்டின் நான்கு பெருநகரங்களில் ஷோரூம்களை திறந்து தங்களது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்புவாய்ந்த அம்சங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தங்களது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும் என சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் சுகாஸ் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








