கிடுகிடுவென அதிகரிக்கும் சுசுகி மோட்டார்சைக்கிள்களின் விற்பனை.. கடந்த மாதத்தில் மட்டும் 37% உயர்வு..
2020 ஜூலை மாதத்தில் விற்பனையில் 37 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளதாக சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மொத்தமாக சுசுகி நிறுவனம் 34,412 யூனிட்கள் விற்பனையை கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளது. இதில் இந்திய சந்தையில் விற்பனையான 31,421 யூனிட்களும், வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 2991 யூனிட்களும் அடங்கும்.

இந்த விற்பனை எண்ணிக்கை இந்நிறுவனத்தின் 2020 ஜூன் மாதத்தை காட்டிலும் 37 சதவீதம் அதிகமாகும். கடந்த மே 18ஆம் தேதியில் இருந்து தயாரிப்பு பணிகளை மீண்டும் துவங்கிய சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து நிலவும் மோட்டார்சைக்கிள் தேவையால் மறுமலர்ச்சியை ஊரடங்கிற்கு பிறகு அடைந்துவருவதாக தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையை அப்படியே இந்த ஆகஸ்ட் மாதத்திற்கும் தொடர விரும்பும் இந்நிறுவனம் இந்த மாதத்தில் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க சில திட்டங்களை வகுத்து வைத்துள்ளது. இந்த திட்டங்களில் ஒன்று தான் ‘உங்களது கதவருகில் சுசுகி'.

விற்பனை மற்றும் சேவைகளை அதிகப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ள இந்த செயல்முறை திட்டம் இந்தியா முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின் 279 டீலர்ஷிப் ஷோரூம்களிலும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் ஒரு க்ளிக் மூலமாக தங்களுக்கு பிடித்தமான சுசுகி தயாரிப்பை வாங்க முடியும்.

அதேசமயம் அரசாங்கத்தின் பாதுகாப்பு வழிமுறைகளையும் ‘நியூ-நார்மல்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிறுவனம் பின்பற்றும் என்பதிலும் எந்த மாற்று கருத்தும் இல்லை. இதன்படி தொழிற்சாலை பணியாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முக கவசம் அணியவும் வலியுறுத்தப்படுவர்.

இதனை உறுதிப்படுத்தியுள்ள சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கொய்சிரோ ஹிராவ் மேலும் கூறுகையில், ஆட்டோமொபைல் துறை இப்போது உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் இயல்புநிலையை நோக்கி நகர்கிறது.

அதே நேரத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதம் முதல், கோவிட் -19 பரவலுக்கு முந்தைய உற்பத்தி மற்றும் விற்பனை அளவை அடைய எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம் என தெரிவித்தார்.

2020 முதல் பாதியில் ஏற்பட்ட கடினமான சூழ்நிலையை சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் சரியாக கையாண்டுள்ளது என்பது இதன் விற்பனை வளர்ச்சியை பார்க்கும்போது அறிய முடிகிறது. இருப்பினும் பழைய இயல்பு நிலைக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தான் திரும்பவுள்ளதாக கூறியுள்ள இந்நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் தான் பிஎஸ்6 தரத்தில் ஜிக்ஸெர் 250 மற்றும் 250 எஸ்எஃப் மாடல்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








