சுசுகி கதனா 1000சிசி பைக்கின் இந்திய அறிமுகத்தில் தாமதம்... காரணம் என்ன..?
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரபலமான பழைய பைக் மாடலான கதனா மீண்டும் இந்திய சந்தையில் மீண்டும் கொண்டுவரப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது. ஆனால் இந்த வருடத்தில் இந்த பைக் இந்திய சந்தைக்கு வராது என தற்போது சுசுகி நிறுவனத்தின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசுகி நிறுவனத்தில் இருந்து 1981ல் விற்பனை துவங்கிய கதனா பைக் 2006ஆம் ஆண்டு வரை தயாரிப்பில் இருந்தது. இதனை மீண்டும் சந்தைக்கு கொண்டுவரவுள்ளதாக சுசுகி நிறுவனம் கடந்த ஆண்டில் தெரிவித்திருந்தது.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கூட இந்த பைக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் இந்த 1000சிசி பைக் விரைவில் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனையை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 பைக் மாடலில் உள்ள கூர்மையான டைனாமிக் தோற்றத்தை விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு சுசுகி கதனா பைக் மிக சரியான தேர்வாக இருக்கும். 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கதனா பைக் மட்டுமின்றி தனது மொத்த பிஎஸ்6 பைக்குகளையும் சுசுகி நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சுசுகி பிஎஸ்6 வெர்சன் பைக்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக இந்த வருடத்திற்குள்ளாக அறிமுகப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் கதனா பைக் மட்டும் இந்த வருடம் முழுக்க கிடப்பில் இருக்கவுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலினை சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கொய்சிரோ ஹிராவ் மற்றும் துணை நிர்வாக இயக்குனர் தேவஷிஷ் ஹாண்டா ஆகியோர் உறுதி செய்துள்ளனர். இதன் அறிமுகம் தாமதமாகுவதற்கு மிக முக்கிய காரணம், வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சுசுகி கதனா பைக் பிஎஸ்6 தரத்தில் இல்லை.

ஒருவேளை இந்த பைக் தற்போதைய இந்திய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டாலும், இந்த பைக் மீதான வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை பொறுத்து தான் சுசுகி நிறுவனம் இந்த 1000சிசி பைக்கை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தும்.

சுசுகி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஹிராவ் இதுகுறித்து கூறுகையில், ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்காக வைக்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்களுக்கு இந்த பழமையான பைக் மாடல் பிடிக்க சில மாதங்கள் ஆகும்.

அதுமட்டுமின்றி எங்களுக்கும் இந்த பைக்கை புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமானதாக அப்டேட் செய்ய சில மாதங்கள் ஆகும் என்றார். இதனால் ஒட்டுமொத்தமாக சுசுகி கதனா பைக் இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் அறிமுகமாகலாம்.

எல்இடியில் பழமையான செவ்வக வடிவ ஹெட்லைட்ஸை கொண்டுள்ள புதிய கதனா பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக KYB 43மிமீ யூஎஸ்டி ஃபோர்க் முன்புறத்திலும் லிங்க்-டைப் மோனோஷாக் அமைப்பு ப்ரீலோட் மற்றும் ரீபாண்ட் டேம்பிங்கிற்காக அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் பின் சக்கரத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

ப்ரேக்கிங் பணிக்காக ப்ரெம்போ ரேடியல் காலிஃபர்கள் வழங்கப்பட்டுள்ளன. இயக்கத்திற்கு கதனா பைக்கில் 999சிசி இன்லைன்-4, லிக்யூடு-கூல்டு என்ஜினை சுசுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் மாடல் பைக்கில் ஏற்கனவே பொருத்தப்பட்டு இருந்த இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 150 பிஎச்பி பவரையும், 9,500 ஆர்பிஎம்-ல் 108 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

இவை தவிர்த்து மீண்டும் சந்தையில் விற்பனையை துவங்கவுள்ள கதனா பைக்கில் ஸ்லிப்பர்-க்ளட்ச், மூன்று நிலைகளில் சரி செய்யக்கூடிய ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

முன்பே கூறியதுபோல், கதனா மாடல் சுசுகி நிறுவனத்தில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக விளங்கியது. அடுத்த ஆண்டில் சில அப்டேட்களுடன் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள இந்த பைக் அறிமுகத்திற்கு பிறகு ஏகப்பட்ட வாடிக்கையாளர்களை பெறும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








