யூஸ்டு பைக் விற்பனையில் இறங்கியது ட்ரையம்ஃப் நிறுவனம்!
வர்த்தகத்தை வலுப்படுத்தும் விதமாக, இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பைக் விற்பனையை துவங்கி இருக்கிறது ட்ரையம்ஃப் நிறுவனம். பல்வேறு சிறப்பு திட்டங்களுடன் பயன்படுத்தப்பட்ட பைக்குகளை ட்ரையம்ஃப் விற்பனை செய்ய உள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனம் இந்திய பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் அதிக வரவேற்பை பெற்ற பிராண்டாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகான சூழலில் வாகன சந்தையில் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் புதுமையான பல முயற்சிகளிலும், வர்த்தக மாற்றங்களையும் செய்து வருகின்றன.

அந்த வகையில், ட்ரையம்ஃப் நிறுவனம் இந்தியாவில் தனது பயன்படுத்தப்பட்ட பைக்குகளுக்கான புதிய விற்பனைப் பிரிவை அறிவித்துள்ளது.. ட்ரையம்ஃப் அப்ரூவ்டு என்ற பெயரில் இந்த பிரிவு செயல்பட உள்ளது.

தனது பயன்படுத்தப்பட்ட பிரிமீயம் பைக்குகளை பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, தரம் பரிசோதிக்கப்பட்டு பின்னர் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். மேலும், இந்த பைக்குகளுக்கு வாங்கிய தேதியில் இருந்து ஓர் ஆண்டுக்கான வாரண்டி வழங்கப்பட உள்ளது.

அதேபோன்று, ட்ரையம்ஃப் அப்ரூவ்டு பிரிவு மூலமாக வாங்கப்படும் பயன்படுத்தப்பட்ட பைக்குகளுக்கு ஓர் ஆண்டுக்கு சாலை அவசர உதவி திட்டமும் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் பைக்குகளுக்கு அப்ரூவ்டு சான்று, வாகனத்தின் உரிமையாளர், சர்வீஸ் செய்ததற்கான சான்றுகள் மற்றும் மாசு சான்று உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

ட்ரையம்ஃப் அப்ரூவ்டு மூலமாக வாங்கப்படும் பயன்படுத்தப்பட்ட பைக் மாடல்களுக்கு கடன் உதவி திட்டத்தையும் வழங்குவதாக ட்ரையம்ஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட ட்ரையம்ஃப் பைக்குகளை மிகச் சரியான விலையில், அதிக நம்பகத்தன்மையுடன் வாங்குவதற்கான வாய்ப்பை ட்ரையம்ஃப் அப்ரூவ்டு பிரிவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, ட்ரையம்ஃப் அப்ரூவ்டு என்ற பிரத்யேக இணையதளத்தையும் ட்ரையம்ஃப் அறிமுகப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








