இந்தியாவில், யூஸ்டு சூப்பர் பைக் விற்பனை திட்டத்தை துவங்கும் ட்ரையம்ஃப்!
இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட சூப்பர் பைக்குகளுக்கான புதிய விற்பனை திட்டத்தை துவங்க இருக்கிறது ட்ரையம்ஃப் நிறுவனம். இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனம் இந்தியாவின் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகு வாகன விற்பனைத் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக பலரும் தனிநபர் வாகனங்களை வைத்திருக்க விரும்புகின்றனர். இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வகை கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது.

இதேபோன்று, பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனையும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையிலும் இறங்கி வருகின்றன.

அந்த வகையில், ட்ரையம்ஃப் நிறுவனமும் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையில் இறங்க முடிவு செய்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தனது பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனை திட்டத்தை துவங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல்முறையாக சூப்பர் பைக்குகளை வாங்குவோரை மனதில் வைத்து இந்த விற்பனையை துவங்க இருப்பதாக ட்ரையம்ஃப் தெரிவித்துள்ளது. அதாவது, சரியான பட்ஜெட்டில், குறைபாடு இல்லாத பயன்படுத்தப்பட்ட சூப்பர் பைக்குகளை அச்சமின்றி வாங்குவதற்கான வாய்ப்பை தனது பிரிவின் மூலமாக வழங்க ட்ரையம்ஃப் திட்டமிட்டுள்ளது.

ட்ரையம்ஃப் அப்ரூவ்டு என்ற பெயரில் இந்த பயன்படுத்தப்பட்ட பைக்குகளுக்கான விற்பனைப் பிரிவு துவங்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் மூன்று ட்ரையம்ஃப் அப்ரூவ்டு டீலர்ஷிப்புகளை திறக்கப்பப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் மொத்தம் 10 ட்ரையம்ஃப் அப்ரூவ்டு டீலர்ஷிப்புகள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட பைக்குகளை பரிசோதனை செய்து, சான்றுகள் சரிபார்க்கப்பட்டு மீண்டும் வாரண்டியுடன் விற்பனை செய்யப்படும்.

அதேபோன்று, ஏற்கனவே ட்ரையம்ஃப் பைக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பைக்குகளை வாங்கி பரிசோதனைகள் மற்றும் பழுதுகள் நீக்கப்பட்டு வாரண்டியுடன் வழங்குவதற்கான திட்டமும் இருக்கிறது. வாடிக்கையாளர் மத்தியில் இருக்கும் வரவேற்பை பொறுத்து இந்த திட்டத்தை விரிவுப்படுத்த ட்ரையம்ஃப் திட்டமிட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட பைக்குகளுக்கு கடன் திட்டங்களையும் ட்ரையம்ஃப் அப்ரூவ்டு டீலர்ஷிப்புகள் மூலமாக செய்து தருவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் மனநிம்மதியுடன் பயன்படுத்தப்பட்ட பைக்குகளை வாங்குவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்று ட்ரையம்ஃப் கருதுகிறது. தற்போது 13 பிரிமீயம் வகை பைக் மாடல்களை ட்ரையம்ஃப் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








