புது வாகனம் வாங்கும் எண்ணம் இல்லாதவர்களைகூட வளைத்துபோட டிவிஎஸ் திட்டம்... அதிரடி ஆஃபர் அறிவிப்பு!
புதிய வாகனங்களை வாங்கும் எண்ணம் இல்லாதவர்களைக்கூட கவருகின்ற வகையில் சிறப்பு ஆஃபர் திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் அனைத்துத்துறையும் விற்பனை மற்றும் உற்பத்தி இல்லாமல் அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன. அதிலும், வாகனங்கள் சார்ந்த துறைகளின் நிலை சற்றே படு மோசமானதாக அமைந்திருக்கின்றது.

இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு லேசான தளர்வுகளை சமீபத்தில் வழங்கியது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிக தீவிரமாக செயல்படத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக, கடந்த காலங்களில் விட்டதை எல்லாம் மீண்டும் பிடிக்கின்ற வகையிலான முயற்சியில் அவை ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையிலான ஓர் முயற்சியில்தான் தற்போது டிவிஎஸ் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இதற்காக, புதிய சலுகை திட்டங்களையும் அது அறிவித்து வருகின்றது. அவ்வாறு, தற்போது வெளியிட்டுள்ள ஆஃபர், புதிய வாகனத்தை வாங்கும் எண்ணமே இல்லாதவர்களைக்கூட கவரும் வகையில் சிறப்பு திட்டமாக அமைந்துள்ளது. அப்படி என்ன ஆஃபர் என்றுதானே கேட்குறீங்க. இதுபற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

டிவிஎஸ் நிறுவனம் இந்த அதிரடி அறிவிப்பை அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றான டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டிற்கு அறிவித்துள்ளது.
அதாவது, இந்த மொபட்டை 25 சதவீத முன் தொகை செலுத்தி வாங்குபவர்கள் ஆறு மாதங்களுக்கு பின்னர் இஎம்ஐ-க்கான தொகையைச் செலுத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது.

நம்ம ஊரு கடைக்காரர்கள் முதல் பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோரின் பிரதான வாகனமாக இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் 100 இருக்கின்றது. இது பயணிகள் வாகன பயன்படுவதைக் காட்டிலும் வர்த்தக ரீதியிலாக பயன்படுவதே அதிகம். குறிப்பாக, பார்சல் மற்றும் லக்கேஜ் போன்றவற்றை ஏற்றிச் செல்ல உகந்த வாகனமாக இருக்கின்றது.

இதன் காரணமாக சிறிய கடைகளை வைத்து நடத்தும் வியாபாரிகள் டாடா ஏஸ் போன்ற சரக்கு மின் வேன்களுக்கு பதிலாக டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டையேப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் உருவம் சிறியதாக இருந்தாலும் நீடித்து உழைப்பதில் கெட்டிக்காரனாக இந்த மொபட் உள்ளது. எனவேதான், இந்திய சாலைகளில் இந்த மொபட்டை நம்மால் அதிகம் காண முடிகின்றது.

இந்நிலையிலேயே அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் சிறப்பு திட்டமாக ஆறு மாதங்கள் கழித்து இஎம்ஐ தொகையைச் செலுத்தும் ஆஃபரை அறிவித்துள்ளது. இத்துடன், 75 சதவீத கடன் திட்டத்தையும் அது வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. எனவே, முன் தொகையாக 25 சதவீதம் ரொக்கத்தை மட்டும் செலுத்தினால் போதும் புதிய எக்ஸ்எல் 100 மொபட்டை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

இந்த சிறப்பு திட்டத்தை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே வழங்க இருப்பதாக டிவிஎஸ் அறிவித்துள்ளது. அதாவது, வருகின்ற 31ம் தேதி வரை 75 சதவீத கடன் உதவியுடன், ஆறு மாதங்கள் கழித்து இஎம்ஐ செலுத்தும் திட்டம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது சிறு வணிக மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிவிஎஸ் எக்ஸ்எல் 100 ஸ்கூட்டரில் 99.7 சிசி திறன் கொண்ட 4-ஸ்ட்ரோக் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது உயர் தீப்பொறி ஆற்றல் கொண்ட எஞ்ஜின் ஆகும்.
மேலும், இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 4.3 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்மிலும், 6.5 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த உச்சபட்ச திறனை சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸில் அது வெளிப்படுத்துகின்றது.

தற்போது இந்த ஸ்கூட்டர் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அதாவது, டிவிஎஸ் எக்ஸ்எல் 100 கம்ஃபோர்ட் (விலை ரூ. 45,114), எக்ஸ்எல் 100 ஹெவி ட்யூட்டி (விலை ரூ. 43,544), எக்ஸ்எல் ஹெவி ட்யூட்டி ஸ்பெஷல் எடிசன் (விலை ரூ. 44,304) ஆகிய வேரியண்டுகளில் அது விற்பனைக்கு கிடைக்கின்றது.

அவையனைத்தும் பிஎஸ்-6 தரத்திற்கு சமீபத்தில் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த அப்கிரேஷனால் முந்தைய பிஎஸ்-4 மாடல் எக்ஸ்எல் 100 மொபட்டுகளைக் காட்டிலும் 15 சதவீத அதிக மைலேஜை வழங்கும் நிலைக்கு அது உயர்ந்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் கொரோனா பிரச்னை காரணமாக நீண்ட நாட்கள் கழித்து தற்போதே உற்பத்தி பணியை தொடங்கியிருக்கின்றது. முன்பெப்போதும் இல்லாத வகையில் அதிக பாதுகாப்பு வழிகளைக் கடைபிடித்து அப்பணியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

அதாவது, சமூக இடைவெளி, தொடர்பு இல்லாமல் வாகனங்களை கட்டமைத்தல் மற்றும் அதிக தூய்மை உள்ளிட்டவற்றை கையாண்டு வாகனங்களை தயாரித்து வருகின்றது.
இந்த நிலையிலேயே அதன் தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்கச் செய்கின்ற வகையில் ஆஃபர்களை வாரி வழங்க தொடங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








