அடுத்தடுத்து இந்தியாவில் களமிறங்கும் புதிய 3 மேக்ஸி-ஸ்கூட்டர்கள்... முழு விபரங்கள் இதோ...
வேகமாக வளர்ந்து வரும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கூட்டர் வகை மோட்டர்சைக்கிள்களுக்கு எப்போதுமே ஒரு தனி அடையாளம் உண்டு. அது தற்போது சிறிது சிறிதாக பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது.

2001ல் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து மார்க்கெட்டிற்கு வந்த ஆக்டிவா ஸ்கூட்டர் இந்திய போக்குவரத்தில் எத்தகைய பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதோ அதேபோன்று தற்போது அதிக திறன் கொண்ட, அளவில் பெரிய மேக்ஸி ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் செல்ல ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக இந்திய சந்தையில் அடுத்தடுத்து மூன்று புதிய மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெவ்வேறு நிறுவனங்களால் களமிறக்கப்படவுள்ளன. இந்த மூன்று மேக்ஸி ஸ்கூட்டர்களை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160
மோட்டோ-ஸ்கூட்டர் வகையை சேர்ந்த இந்த புதிய அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் இந்த வருட இறுதியில் அறிமுகமாகவுள்ளது. இத்தாலியில் இரு வருடங்களாக தயாரிப்பு மற்றும் டிசைன் பணிகளில் இருந்த இந்த ஸ்கூட்டர் முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

எல்இடியில் ஹெட்லைட்ஸ் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை பெற்றுள்ள இந்த புதிய ஸ்கூட்டரில் 160சிசி 3-வால்வு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிவிடி கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10.8 பிஎச்பி பவரை ஸ்கூட்டருக்கு வழங்கும் திறன் கொண்டது.

இந்த புதிய அப்ரில்லா ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் எஸ்எக்ஸ்ஆர் மாடலின் 125சிசி வெர்சன் ஸ்கூட்டரையும் இந்தியாவில் களமிறக்க அப்ரில்லா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படவுள்ள 125சிசி என்ஜின் 9.4 பிஎச்பி பவரையும் 9.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஹோண்டா ஃபோர்ஷா 300
ஃபோர்ஷா 300 ஸ்கூட்டர் இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. இருப்பினும் ஏற்கனவே இந்த ஸ்கூட்டர் மாடலை நான்கு இந்திய வாடிக்கையாளர்கள் சொந்தமாக வாங்கியுள்ளனர். ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் முதல் மேக்ஸி வகை ஸ்கூட்டராக விளங்கும் ஃபோர்ஷா 300 ஸ்கூட்டரில் 279சிசி, லிக்யூடு-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

4-வால்வு 4-ஸ்ட்ரோக்களை கொண்ட ஃப்யூல்-இன்ஜெக்டட் SOHC மோட்டாருடன் உள்ள இந்த 279சிசி என்ஜின் 7000 ஆர்பிஎம்-ல் 24.8 பிஎச்பி பவரையும், 5,750 ஆர்பிஎம்-ல் 27.2 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும்.

இந்த என்ஜின் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக ஆட்டோமேட்டிக் மைய விலக்கு க்ளட்ச் மற்றும் வி-பெல்ட் உடன் உள்ள சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றுள்ளது. இதன் இந்திய எக்ஸ்ஷோரும் விலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ஆனால் மெயின் இக்னிஷன், பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் இருக்கைக்கு அடியில் உள்ள பகுதியை கண்ட்ரோல் செய்வதற்காக ஸ்மார்ட் கீ-ஐ பெற்றுள்ளதால், எப்படியிருந்தாலும் விலையுயர்ந்த ஸ்கூட்டர் மாடலாகவே இந்திய சந்தையை வந்தடையும்.

22கைம்கோ எக்ஸ்-டவுன் 300ஐ ஏபிஎஸ்
தைவான் நாட்டை சேர்ந்த கைம்கோ நிறுவனத்துடன் டெல்லியை சேர்ந்த எலக்ட்ரிக் ஸ்டார்ட்அப் 22 மோட்டார்ஸ் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தால், 22 கைம்கோ எக்ஸ்-டவுன் 300ஐ ஏபிஎஸ் என்ற புதிய மேக்ஸி-ஸ்கூட்டர் இந்தியாவில் மிக விரைவில் அறிமுகமாகவுள்ளது.

மற்ற இரு மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கு இணையான தோற்றத்தை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் இரு முழு ஹெல்மெட்களை வைக்க முடியும் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இதனால் இந்த 22கைம்கோ எக்ஸ்-டவுன் 300ஐ ஸ்கூட்டர் மாடல் தொலைத்தூர பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

இதன் டெல்லி ஆன்-ரோடு விலை ரூ.2.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்கூட்டருக்கான டெலிவிரிகள் வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கப்படவுள்ளன. இந்த மேக்ஸி ஸ்கூட்டரில் உள்ள 276சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 24 பிஎச்பி பவரையும் 25 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்த 22கைம்போ மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியா முழுவதும் கொண்டுவர தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய ஸ்கூட்டர் இந்தியாவில் முதலவதாக டெல்லி, பெங்களூர், புனே, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து விற்பனையை துவக்கவுள்ளது.
மேலும் இந்தியாவில் வலுவாக காலூன்ற அடுத்த மூன்று ஆண்டுகளில் 300 டீலர்ஷிப் மையங்களை நிறுவ தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த மூன்று மேக்ஸி ஸ்கூட்டர்களால் இந்திய சந்தையில் எதாவது மாற்றம் நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








